Home இலங்கை நிவாரணம் வழங்க சுற்றுநிரூபங்களையும் ஒழுங்குவிதிகளையும் தடையாகக் கொள்ளவேண்டாம்….

நிவாரணம் வழங்க சுற்றுநிரூபங்களையும் ஒழுங்குவிதிகளையும் தடையாகக் கொள்ளவேண்டாம்….

by admin

அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்க சுற்றுநிரூபங்களையும் ஒழுங்குவிதிகளையும் தடையாகக் கொள்ளவேண்டாம்.
– ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு….

 நிவாரண நிலையங்களுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்…

 அனர்த்த நிலைமை சீரானதன் பின்னர் மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க பணிப்பு…

திடீர் வெள்ளப்பெருக்கினால் அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு தேவையான நிவாரணங்களை துரிதமாக பெற்றுக்கொடுப்பதற்கு சுற்றுநிரூபங்களையும் ஏனைய ஒழுங்குவிதிகளையும் தடையாகக் கொள்ளவேண்டாம் எனவும் அவ்வாறு காணப்படுமாயின் அவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்காக செயற்படுத்தப்படும் நிவாரண வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்யும் விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (23) முற்பகல் அனுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் சிலவற்றிற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

முதலில் ராஜாங்கனை யாய 2 ஸ்ரீ துட்டுகெமுனு விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து சுமூகமாக கலந்துரையாடினார். அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களும் விரைவில் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டியதுடன், எந்தவொரு நபரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகக்கூடாதென ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.

அனர்த்த நிலைமைகள் சீரானதன் பின்னர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உரிய துறையினருக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார். மேலும் மக்களின் சுகாதார வசதிகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

விகாராதிபதி வண. மஹமான்கடவல தம்மசிறி தேரர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ராஜாங்கனை யாய 9 கெமுனுபுர ஸ்ரீ போதிராஜராம விகாரையிலுள்ள நலன்புரி நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் தகவல்களை கேட்டறிந்தார். அத்தோடு அவர்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத்திட்டங்களையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

விகாராதிபதி வண. இஹலமுல்லே சந்தஜோதி தேரரையும் ஜனாதிபதி அவர்கள் சந்தித்து சுமூகமாக கலந்துரையாடினார்.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.12.23

2019/12/23 – 02

தம்புத்தேகம விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்…

திடீர் வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளான அனுராதபுர மாவட்ட மக்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (23) பிற்பகல் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது அங்குள்ள பொருட்களின் விலை மற்றும் தரம் ஆகியவற்றை ஜனாதிபதி அவர்கள் மேற்பார்வை செய்ததுடன், வர்த்தகர்களையும் நுகர்வோரையும் சந்தித்து பொருளாதார மத்திய நிலையத்தின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.

உயர் தரத்துடன் நுகர்வோருக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் பொருளாதார மத்திய நிலையத்தை முன்னெடுத்து செல்லவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்

மொஹான் கருணாரத்ன

பிரதிப் பணிப்பாளர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2019.12.23

                                                            

பொலன்னறுவை மாவட்டத்தில் அனர்த்தத்திற்குள்ளான மக்களை மீளக் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு…

வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளாகிய பொலன்னறுவை மாவட்ட மக்களை மீளக்குடியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத்திட்டங்கள் தொடர்பில் கண்டறிவதற்கான விசேட கலந்துரையாடலில் இன்று (23) பிற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்

இதுவரை பொலன்னறுவை மாவட்டத்தில் அனர்த்தத்திற்குள்ளான 451 குடும்பங்களை சேர்ந்த 1588 பேர் 10 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு 08 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 250 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பல சந்தர்ப்பங்களில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட எலஹெர, பகமூன ஜிபிஎஸ் பிரிவின் 21 குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகளை இனங்கண்டு, அங்கு வீடுகளை நிர்மாணித்து அவர்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் அவர்கள் மீண்டுமொருமுறை இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக்கூடாதெனவும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

கடந்த போகத்தின்போது பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இந்த கலந்துரையாடலில் பங்குபற்றாத அதிகாரிகளையும் தரப்பினரையும் அழைத்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், தமன்கடுவ பிரதேச செயலக பிரிவில் சுதுநெலும்கம பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை கண்டறிவதற்கான கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத், முன்னாள் முதலமைச்சர் எஸ்எம்.ரஞ்சித் மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.

மொஹான் கருணாரத்ன

பிரதிப் பணிப்பாளர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2019.12.23

 

                                                                                2019/12/23 – 04

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More