Home இலங்கை தவப்பிரியா மீதான தாக்குதல்  – விசாரணை நிறைவு கட்டத்தில்

தவப்பிரியா மீதான தாக்குதல்  – விசாரணை நிறைவு கட்டத்தில்

by admin
பாறுக் ஷிஹான்

நிந்தவூரில் இம்மாதம் முதலாம் திகதியன்று  அரச ஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு  வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுவரும் திருமதி தவப்பிரியா சுபராஜ் தொடர்பான விரிவான விசாரணை வியாழக்கிழமை (09) முற்பகல் 11 மணியளவில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கல்முனை பிராந்திய அலுவலகத்தில் ஆரம்பமானது.

இவ்விசாரணையின் போது  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப்  தலைமை தாங்கியதுடன் குறித்த சம்பவத்தில் முறைப்பாட்டாளர் சார்பாக பெண்ணின் கணவர் சுபராஜ் மற்றும் சம்மாந்துறை  காவல் நிலைய உத்தியோகத்தர்கள் அம்பாறை மாவட்ட விவசாய சேவை திணைக்கள உதவி ஆணையாளர் எல் ஜீ சாமினி சோமதாச ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் 2 மணித்தியாலங்களாக குறித்த விசாரணைகள் இடம்பெற்றதுடன் காவல்துறை  தரப்பில் தற்போதைய விசாரணையின் முன்னேற்றங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணையில் விரிவாக ஆராயப்பட்டது.மேலும் சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கை கிடைக்க பெற்ற பின்னர் குறித்த வழக்கு விசாரணையின் அறிக்கையை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டது.

இதே வேளை  அம்பாறை மாவட்ட விவசாய சேவை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எல் ஜீ சாமினி சோமதாச விசாரணையின் போது குறித்த பெண்ணை தாக்கிய நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இருந்த போதிலும் அவருக்கெதிராக திணைக்களத்தின் உள்ளக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அது தொடர்பாக விடயங்கள் வெளியிடப்படும்.அத்துடன் கட்டாய விடுவிப்பில் நிந்தவூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.எம்.கார்லிக் என்பவர் உள்ளார். இது தவிர தாக்கப்பட்ட முறைப்பாட்டாளரான பெண் உத்தியோகத்தர் இடமாற்ற  கோரிக்கை ஒன்றினை எம்மிடம் முன்வைத்துள்ளார்.அந்த விடயம் சாதகமாக பரீசிலனை செய்யப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற  இவ்விசாரணையில் மேற்கூறியவர்களை தவிர தாக்குதல் நடத்தியதாக முறையிடப்பட்டிருந்கும் நிந்தவூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.எம்.கார்லிக்   கல்முனைப் பிராந்திய உதவி காவல்துறை  அத்தியட்சகர் சட்ட வைத்திய அதிகாரி பாதிக்கப்பட்ட பெண் எவரும் இன்றைய விசாரணையில் சமூகம் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்  கல்முனை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.அரச உத்தியோகத்தரான பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தின் பின்னணி

நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் நிலைய முகாமைத்துவ உத்தியோகத்தராக பணி புரிந்து வந்த பி.தவப்பிரியா என்பவர் கடந்த முதலாம் திகதி நிலையத்தின் தலைமை கமநல உத்தியோகத்தரினால் கடமை நேரத்தில் தாக்கப்பட்டார்.புதிய வருடத்தின் கடந்த 1 ம் திகதி சத்திய பிரமாணம் நிகழ்வு ஆரம்பமாகிய வேளை இச்சம்பவம் இடம்பெற்றதாகவும்  அனைத்து ஊழியர்களுக்கு முன்னிலையில் தனக்கு  கன்னத்தில் குறித்த நபர்  அறைந்துள்ளதாக  அன்றைய தினம் சம்மாந்துறை காவல்  நிலையத்தில்  முறைப்பாடொன்றை மேற்கொண்ட பின்னர்  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த பெண் ஊழியர் தாக்கப்பட்டு 5 நாட்கள் ஆகியும்  காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்ட அதிகாரி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பது தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் கல்முனை பிராந்திய கிளையில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

தற்போது கடந்த 5 நாட்கள் தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை  காவல்துறையினர்  கைது செய்து நீதிமன்றத்தில்  முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை  தாக்கிய அரச உத்தியோகத்தரை கைது செய்ய வலியுறுத்தி பெண்ணுரிமை அமைப்புகள் கடந்த  திங்கட்கிழமை ( 06 ) ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கு  அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்டிருந்தன . எனினும் இ சந்தேகநபர் மடக்கிப் பிடிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது .ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு  நியாயம் கோரி போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 05 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த தாக்குதலுக்குள்ளான பெண் ஊழியர் தவப்பிரியா  மேலதிக சிகிச்சைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(5)  இடமாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  #தவப்பிரியா  #தாக்குதல்  #விசாரணை #மனிதஉரிமைஆணைக்குழு

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More