Home இலங்கை அளவுக்கதிகமான பகிடி வதை – பாலியல் துன்புறுத்தல்கள் – 3 முக்கிய தீர்மானங்கள்….

அளவுக்கதிகமான பகிடி வதை – பாலியல் துன்புறுத்தல்கள் – 3 முக்கிய தீர்மானங்கள்….

by admin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துதல், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள், வட்ஸ்அப் தகவல்கள், அலைபேசி உரையாடல்கள் அடங்கிய தரவுகளை பொலிஸாரின் இணையவழிக் குற்றங்கள் பிரிவு (Sri Lankan Police Cyber crime unit) ஊடாக விசாரணை நடத்தல் மற்றும் மாணவர் ஒன்றியம் உடனடியாக புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வை நடத்த ஒழுங்கு செய்தல் ஆகிய முக்கிய 3 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பகிடி வதை காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, உயர் கல்வி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அந்த முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், முறைப்பாட்டு அதிகாரி, பிரதி முறைப்பாட்டு அதிகாரிகள், மாணவ ஆலோசகர்கள், மூத்த மாணவ ஆலோசகர்கள், மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உள்பட மாணவர் ஒழுக்கத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வளாகத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திலேயே மேற்படி மூன்று தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

இந்தக் கூட்டம் நிறைவடைந்ததும் கூட்டத்தில் அமைக்கப்பட்ட குழு, சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் கிளிநொச்சி வளாகத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுக்க பயணமாகினர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பகிடி வதை காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பிலும் அங்கு மாணவிகளுக்கு தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றமை தொடர்பிலும் ஜனாதிபதி மட்டத்துக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் கிளிநொச்சி வளாக விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோருக்கு மாணவிகளோ அவர்களது பெற்றோரோ முறைப்பாடு வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன்,யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஊக்கங்களை வழங்குவதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம் . சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கிறார். அவர் வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குச் சென்று இந்த விடயங்கள் தொடர்பில் நேரில் ஆராய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்று வரும் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வருகை தரவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More