Home இலங்கை சர்வதேச சட்டத்தரணிகள் வந்து எங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் :

சர்வதேச சட்டத்தரணிகள் வந்து எங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் :

by admin
அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட் அலுவவலகம் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே சர்வதேச சட்டத்தரணிகள் வந்து எங்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் முன்னாள் தலைவி   மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார்.
மன்னாரில் இன்று வியாழக்கிழமை(12) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து  கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,.
மன்னார் சதொச மனித புதை குழி வழக்கு விசாரணைகள் மன்னார் நீதி மன்றத்தில் 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முதல் இடம் பெற்று வந்தது. குறித்த வழக்கு விசாரணைகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக நாங்களும் சென்று வந்தோம். இந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி இடம் பெற்ற வழக்கு விசாரணையின் போது கட்டளை பிரப்பிக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் ‘சதொச’ மனித புதைகுழி வழக்கு விசாரணைகளின் போது முன்னிலையாக முடியாது கட்டளையிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் எங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணிகளிடம் எமது முறைப்பாடுகளை வழங்கியுள்ள குறித்த சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
ஆனால் தற்போது அரச சட்டத்தரணி அல்லது காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் சார்பான சட்டத்தரணிகள் மாத்திரமே குறித்த வழக்கு விசாரணைகளில் முன்னிலையாக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அரசாங்கத்தையே நம்பவில்லை.
அரசாங்கத்தை நம்பாத நிலையில் நாங்கள் எங்களுக்கு என சட்டத்தரணிகளை தெரிவு செய்து பாதிக்கப்பட்ட மக்களாகிய எங்களுக்காக அவர்கள் மன்றில் முன்னிலையாகி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் குறித்த கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கியதே அரசாங்கம். அப்படி அரசாங்கம் செய்துள்ள நிலையில் அரசாங்கத்தின் சட்டத்தரணிகள் குறித்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் நாங்கள் யாரிடம் சென்று நீதி கேட்பது.?எதிர் வரும் தினங்களில் தடயப் பொருட்கள் பரிசோதனை நடவடிக்கைகள் இடம் பெறவுள்ளது.
குறித்த நடவடிக்கைகள் எவ்வாறு இடம் பெறவுள்ளது.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாக முடியாது என்றால் தடயப் பொருள் பரிசோதனைகளை நாங்கள் எவ்வாறு நம்புவது.?எங்களுக்கு அரசாங்கத்திலும் நம்பிக்கை இல்லை.அரச சட்டத்தரணிகளிலும் நம்பிக்கை இல்லை.
சர்வதேசம் தான் எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் 335 பேர்கள் வரை காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மண்ணை தோண்டி பாருங்கள் என அரச தரப்பு அரசியல் வாதிகள் தெரிவித்தனர். புதைத்த இடத்தை காட்டினால் தானே மண்ணை தோண்டி பார்க்க முடியும்.
காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள்,உறவுகள் எங்கேயோ இருப்பார்கள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டு இருக்க காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இல்லை என்று இவர்கள் செல்ல நாங்கள் யாரிடம் சென்று நீதி கேட்பது என்று தெரியாமல் உள்ளது.எனவே எங்களுக்கு சர்வதேசம் தான்  நீதி வழங்க வேண்டும்.
எனவே எங்களுக்காக வாதாடும் சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாக முடியாது என்றால்  அரச சட்டத்தரணிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
எனவே சர்வதேசத்தில் இருந்து எங்களுக்கு என சட்டத்தரணிகளை அழைத்து வந்து எங்களுக்கு என்று மன்றில் முன்னிலையாகட்டும்.அதனை நாங்கள் நம்புவோம்.
அவர்கள் எங்களுக்காக கதைப்பார்கள்.அதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட அலுவவலகத்திற்கான சட்டத்தரணிகளில் எமக்கு நம்பிக்கை இல்லை.எனவே சர்வதேச சட்டத்தரணிகள் வந்து எங்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.  #காணாமல்ஆக்கப்பட்ட  #அலுவவலகம்  #சட்டத்தரணிகள்  #மனிதபுதைகுழி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More