Home இலங்கை கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக  பல தீர்மானங்கள்…..

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக  பல தீர்மானங்கள்…..

by admin

 

  • ஐரோப்பியர்களுக்கு வீசா விநியோகம் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படும்…

 

  • ஐரோப்பாவிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில்..

 

  • பொதுமக்கள் போக்குவரத்து சேவை, கிருமி தொற்று ஒழிப்புக்கு நடவடிக்கை.…

 

  • வைரஸ் தடுப்புக்கு சீனா மேற்கொண்ட வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வு…

 

  • கொரோனா தடுப்பு செயலணிக்கு நிரந்தர நிலையம்…

 

  • மக்கள் ஒன்றுகூடுவதை குறைப்பதற்கு ஆலோசனை…

 

  • சேவை மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக இணையத்தை பயன்படுத்த அவதானம்….

 

கொரோனா வைரஸ் (Covid –19) பரவுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் ஜனவரி முதல் பின்பற்றிய வழிமுறைகளின் மூலம் நோய் நாட்டிற்குள் வருவதை தடுப்பதற்கு முடியுமாகவிருந்தது. வைரஸ் பரவிய நாடுகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக செயலணி ஒன்றை உருவாக்கிய சில நாடுகளுள் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. அம்முன்னேற்றத்தை மேலும் அதிகப்படுத்தி மக்களின் சுகாதார நிலையை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் இயலுமானளவில் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.

 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மற்றும் பிரதமர் இப்பணிப்புரையை விடுத்துள்ளனர்.

 

வைரசின் பூகோள பரவுதல் தொடர்பாக தெளிவூட்டிய ஜனாதிபதி , ஐரோப்பாவில் பல நாடுகளில் வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் மிகப் பாரதூரமான நிலைமை காணப்படுகின்றது.  அது தொடர்பாக கொரோனா தடுப்பு செயலணியின் அவதானத்திற்குட்படுத்திய ஜனாதிபதி , ஐரோப்பியர்களுக்கு வீசா வழங்குவதை இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்தார்.

 

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் 14 நாட்கள் கண்காணிப்புக்கு உட்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் இருவரும் சந்தித்தவர்களை அடையாளம் காணுவது  தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் அவர்களை கண்காணிப்புக்கு உட்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது. அவர்கள் பயணித்த இடங்கள் மற்றும் சந்தித்தவர்கள் பற்றி தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு, அவர்களை நோய்த் தடுப்பு கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

 

நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்கு மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், விழாக்களை இயலுமானளவு குறைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

 

செயலணிக்கு நிலையான அலுவலகமொன்றை ஸ்தாபித்து தகவல்களை ஒன்றுசேர்த்து தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். நோயை கண்டுபிடிப்பதற்காக  மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை துரிதப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பின் உதவிகளுடன் பரிசோதனை உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

இலங்கை நோய் பரவுவதை தடுப்பதற்கு மேற்கொண்ட வழிமுறைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க உலக சுகாதார அமைப்பு தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

முகக் கவசங்களை எந்தவொரு இடத்திலும் பெற்றுக்கொள்ளும் வகையில்  முறையாக விநியோகிப்பதற்கான ஒரு பொறிமுறையை முன்னெடுப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது. கட்டுப்பாட்டு விலையின் கீழ் எந்தவொரு நபருக்கும் முகக் கவசத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். ஒரு நாளைக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் முகக் கவசங்களை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை கொண்ட நிறுவனங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இக்கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது.

 

நாளை (14) தொடக்கம் பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்து மற்றும் புகையிரதங்கள் கிருமி ஒழிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். அதற்காக பாதுகாப்பு பிரிவினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும்.

 

சீனா தற்போது மிக சிறப்பாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தியுள்ளது. சமூக செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகளை நோய்த் தடுப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க சீனா முக்கியத்துவம் கொடுத்தது. அந்நாடு பின்பற்றிய வழிமுறைகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

 

அரச நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகளை முன்னெடுத்தல், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக வீட்டிலிருந்து செயற்படுத்தலை பரீட்சித்துப் பார்க்க இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமென ஜனாதிபதி  சுட்டிக்காட்டினார்.

 

இலத்திரனியல், அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் நோய்ப் பற்றி மக்களை தெளிவுபடுத்த வேண்டுமே தவிர சமூகத்தில் குழப்ப நிலையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படாதிருத்தலின் முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீத்தா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.  #கொரோனா  #வைரஸ் #தீர்மானங்கள்  #வீசா #ஐரோப்பா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More