Home இலங்கை நடமாட்டத்தை குறையுங்கள்

நடமாட்டத்தை குறையுங்கள்

by admin

யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இரண்டு வார காலமாவது வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என  அரச வைத்திய அதிகாரி சங்க பிரதிநிதிகள் கூட்டாக கோரியுள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
பலாலியில் வந்திறங்கிய 60 பேரை தேடுகிறோம். 
இதுவரையில் யாழ்ப்பாணத்தில் எந்த நோயாளியும் இனம் காணப்படவில்லை. பலாலி விமான நிலையம் மூலம் எமது மண்ணிற்கு 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வந்திறங்கி பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார்கள். அவர்கள் எவருமே கண்காணிக்கப்படவில்லை. அவர்களின் வீட்டு விலாசங்கள் அவர்கள் தொடர்பான தகவல்களை யாழில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் சேகரித்து அவர்களை கண்காணித்து அவர்களுக்கு கொரோனோ உள்ளதா என பரிசோதிக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.
தேவையற்று வெளியில் நடமாடாதீர்கள். 
கொரொனோ தொற்றானது ஒரு நோய் தொற்றுஉள்ளவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்றும். நோயாளியின் நீர் துளிகள் மூலமே அவை பரவுகின்றது. எனவே நாம் நோயில் இருந்து தப்புவதற்கு முதலில் செய்ய வேண்டியது. தேவையற்று வெளியில் நடமாடாமல் வீட்டிலையே இருப்பதே சிறந்தது.அதற்காகவே அரசாங்கம் விடுமுறையை விடுத்துள்ளது.
ஆனால் யாழ்ப்பாணத்தை பார்க்கும் போது நோய்க்காக அரசாங்கம் விட்ட விடுமுறையை பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக விடுக்கப்பட்ட விடுமுறை போல பலரும் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதை விடினும் புடவைக்கடை , நகைக்கடை என்பவற்றிலும் மக்கள் கூட்டமாக பொருட்களை கொள்வனவு செய்வதில் உள்ளார்கள்.
இந்த நோய் தொற்றில் இருந்து எம்மை பாதுகாக்க முடிந்த வரையில் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்லாது தவிர்ப்பதே சிறந்தது. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதாயின் வீட்டில் உள்ள ஒருவர் மாத்திரம் சென்று அவற்றை கொள்வனவு செய்யவும்.
கல்யாண வீடு , பிறந்தநாள் கொண்டாட்டம் என்பவற்றில் கலந்து கொள்வதனையும் தவிர்த்து கொள்வது சிறந்தது.
நோய் தொற்று உள்ளதாக சந்தேகிப்போர் வீட்டில் தனிமைப்பட்டு இருங்கள். 
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் நிச்சயமாக வீடுகளில் தனிமைப்பட்டு இருக்க வேண்டும். நோய் தொற்று ஏற்பட்டு 14 நாட்களின் பின்னரே அதற்கான அறிகுறிகள் தென்படும். எனவே 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்பட்டு இருக்க வேண்டும்.
நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டால் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து அவர் மூலம் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தி அவர் ஊடாகவே வைத்திய சாலைக்கு செல்வது சிறந்தது.
வீட்டில நோய் தொற்று உள்ளவர் என சந்தேகப்படுபவர் தானே தனிமைப்பட்டு இருப்பது மட்டுமின்றி அவர் உபயோகிக்கும் பொருட்களை அவரே சுத்தம் செய்ய வேண்டும்.
கை. கால் முகங்களை கழுவுங்கள். 
அதேவேளை வீட்டிற்கு வெளியே சென்று வருவோர் வீட்டிற்குள் போக முன்னர் முழங்கை வரையிலும் முழங்கால் வரையிலும் முகத்தையும் நன்றாக கழிவி விட்டு செல்ல வேண்டும். அதேபோன்று அலுவலகத்திற்கு செல்வோரும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
வர்த்தக நிலையங்களை இரண்டு வாரமாவது பூட்டுங்கள். 

யாழில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் வர்த்தக நிலையங்களை மூடுவது தொடர்பில் யாழ்.மாநகர சபை முதல்வருடன் கதைத்திருந்தோம். அவரும் தான் அது தொடர்பில் வணிகர் கழகத்துடன் பேசுவதாக கூறி இருந்தார். குறைந்தது இரண்டு வார காலமாவது வர்த்தக நிலையங்களை மூடுவதனால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.

வடக்கு ஆளூநர் கொழும்பில். 
இந்நிலையில் வடமாகாண ஆளுனர் யாழ்ப்பாணத்தில் இல்லை. அவர் கொழும்பில் தங்கியுள்ளார். சில விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அவர் தேவை.  மக்களின் நடமாட்டத்தை  கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறோம்.
வெளிநோயாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை. 
 
 வைத்திய சாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த கிளினிக்கு வருவோரை கட்டுப்படுத்தும் முகமாக சில தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
அதாவது வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு இடையில் இடைவெளிகளை பேணும் நோக்குடன் நோயாளிகள் காத்திருக்கும் கதிரைகளில் ஒன்று விட்ட ஒரு கதிரையில் நோயாளிகள் உட்காரும் முகமாக ஒன்று விட்ட ஒரு கதிரைக்கு ஸ்ரிக்கர் ஒட்டியுள்ளோம். ஸ்ரிக்கர் ஒட்டிய கதிரைகளில் உட்கார வேண்டாம் என அவர்களை அறிவுறுத்தி உள்ளோம். அதேவேளை சுத்திகரிப்பு பணிகளை மூன்று வேளைகளிலும் மேற்கொள்கின்றோம்.
அத்துடன் பொது இடங்களில் இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் வீட்டில் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என அறிவுறுத்தி விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம்.
தேவையற்று வைத்திய சாலைக்கு வராதீர்கள். 
அடுத்து மாதாந்த கிளினிக் வருவோரில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வைரஸ் இலகுவாக பரவி விடும். அதனால் கிளினிக் வருவோர் கட்டாயமாக வைத்தியரை சந்திக்க வேண்டும் எனும் தேவை இருப்பின் மட்டும் கிளினிக் வரலாம். மருத்துவரை பார்க்க வேண்டிய தேவை இல்லாவிடின் அவர்கள் உறவினர்கள் மூலம் தமது கிளினிக் கொப்பியை கொடுத்து மருந்தை பெற்றுக்கொள்ளலாம்.
அதேபோன்று வைத்திய சாலைகளில் தங்கியுள்ள நோயாளர்களை பார்வையிட வரும் பார்வையாளரை கட்டுப்படுத்தி உள்ளோம் ஒரு நோயாளியை ஒருவர் அல்லது இருவர் மட்டுமே பார்வையிட அனுமதிக்க முடியும். அதற்காக மீண்டும் பாஸ் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு நோயாளர்களும் அவர்களின் உறவினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
உபகரணங்கள் போதியளவில் கையிருப்பில் இல்லை. 
கொரோனோ நோயாளிகளை பரிசோதிப்பதற்கு வைத்தியர்கள் , தாதியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் இல்லை தற்போது மந்திகை வைத்திய சாலையில் இரண்டே உள்ளது. அதனை கொண்டு ஒரு நோயாளியையே அணுக முடியும். மேலதிக நோயாளிகள் வந்தால் அவர்களை எவ்வாறு அணுகுவது. மந்திகைக்கு ஒரு கொரோனோ வைத்திய சாலைக்கு ஒரு நோயாளி வந்தால் அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றுவதில்லையே சிக்கலைகளை   இது தொடர்பில் வைத்திய அதிகாரிகளுக்கு அறியப்படுத்தி உள்ளோம்.
தற்போது வெளிநோயாளர் பிரிவுக்கு வரும் நோயாளிகளிடம் கொரோனோ நோய் இருக்கும் என சந்தேகப்படுபவர்களுடன் பழக்கங்கள் இருந்ததா என வினாவி அவ்வாறு பழக்கம் இருந்தால் கொரோனோ நோயாளிகளை பரிசோதிக்க என பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பரிசோதனை செய்கிறோம்.
இதுவரையில் மந்திகை வைத்திய சாலைக்கு நான்கு பேரை கொரோனோ நோய் சந்தேகம் உள்ளதாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த போது அவர்களிடம் அதற்கான அறிகுறிகள் இல்லாததால் அவர்களை வீடுகளுக்கு செல்ல அனுமதித்துள்ளோம். வீடுகளுக்கு சென்றவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்பட்டு இருக்குமாறே அறிவுறுத்தி உள்ளோம்.
அதேவேளை அவசர சிகிச்சை பிரிவில் போதியளவு கட்டில்கள் இல்லை. தற்போது உள்ள கட்டில்கள் அனைத்திலும் வேறு நோயாளர்கள் உள்ளனர். அதேபோன்று செயற்கை சுவாசம் வழங்கும் கருவிகள் உள்ளிட்டவையும் போதியளவில் இல்லை.
எனவே யாழ்ப்பாணத்திற்கு கொரோனோ வைரசின் தாக்கம் வருமாயின் அதனை எதிர்கொள்வதற்கு பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டி வரும். எனவே வரும் முன் காப்போம். நோய் தொற்றில் இருந்து எம்மை பாதுகாக்க உரிய நடைமுறைகளை பின்பற்றுங்கள் என கோரிக்கை விடுத்தனர்,  #அரசவைத்தியஅதிகாரிசங்கம்  # நோயாளி  #பலாலிவிமானநிலையம்  #கொரோனோ

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More