Home இலங்கை தேசிய தௌஹீத் ஜமாத்தின் பெண்கள் பிரிவினர், பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் விடுதி சுற்றிவளைப்பு…

தேசிய தௌஹீத் ஜமாத்தின் பெண்கள் பிரிவினர், பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் விடுதி சுற்றிவளைப்பு…

by admin

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறுத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம் தலைமை தாங்கிய தேசிய தௌஹீத் ஜமாத்தின் பெண்கள் பிரிவினர் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் விடுதியொன்றினை, நேற்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பு தரப்பினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

காத்தான்குடி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் கொழும்பிலிருந்து சென்ற குற்றப் புலனாய்வு பிரிவினர், இந்தத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில்இதன்போது அவர்களுக்கு விசேட அதிரடிப்படையினர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் குறித்த விடுதி அமைந்துள்ள காணிப்பகுதியில் படையினர் தேடுதல் நடத்தியதுடள் விடுதிக் கட்டடங்கள் மற்றும் அங்கிருந்த கணினி உள்ளிட்ட ஆவணங்களையும் ஆராய்ந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை கடந்த புதன்கிழமை சஹ்ரானின் சகோதரர் ஒருவருக்கு 2018ஆம் ஆண்டில் மருத்துவ உதவி வழங்கினார் எனும் குற்றச்சாட்டில், காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவரை அதே பிரதேசத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

2018ஆம் ஆண்டு வெடி விபத்தொன்றில் சிக்கிய சஹ்ரானின் சகோதரர்களில் ஒருவரான முகம்மட் றிழ்வான் தனக்கு ஏற்பட்ட காயத்துக்கு ஒல்லிக் குளம் எனும் பகுதியில் அமைந்திருந்த அவர்களின் முகாம் ஒன்றில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதன்போது றிழ்வானுக்கு மேற்படி காத்தான்குடியைச் சேர்ந்த நபர் மருத்துவ உதவி செய்ததாகவும் தெரிவித்தே குறித்த நபரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதானவர் அரச உத்தியோகத்தர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சஹ்ரானின் சகோதரர் றிழ்வான் கடந்த உயரித்தஞாயிறுத் தாக்குதலின் பின்னர், சாய்ந்தமருது பிரதேசத்தில் தனது குழுவினர் மற்றும் குடும்பத்தவர்களுடன் வீடு ஒன்றில் மறைந்திருந்த போது, பாதுகாப்பு தரப்பினர் சுற்றி வளைத்த நிலையில், குண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்திருந்தார். அதன்போது றிழ்வான் உள்ளிட்ட சஹ்ரானின் இரு சகோதரர்கள், சஹ்ரானின் தாய், தந்தை உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

இருந்தபோதும், அந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்த சஹ்ரானின் மனைவியும், அவரின் சிறுவயது மகளும் உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More