Home இலங்கை யாழ்.குடத்தனையில், வன்முறைக் கும்பலால் 24 வீடுகள் சேதமாக்கப்பட்டன – 7 பேர் காயம்…

யாழ்.குடத்தனையில், வன்முறைக் கும்பலால் 24 வீடுகள் சேதமாக்கப்பட்டன – 7 பேர் காயம்…

by admin

யாழ்.குடத்தனை பகுதியில் வன்முறை கும்பலால் 24 வீடுகள், உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு இலக்காகி 7 பேர் காயமடைந்துள்ளனர். குடத்தனை மத்தியில் நேற்று சனிக்கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் 30 வீடுகள் கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்று வழங்கப்பட்டு அங்கு குடும்பங்கள் வசித்து வருகின்றன. குறித்த வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருக்கும் , அக்கிராமத்தில் வசிக்கின்ற இளைஞர்களுக்கும் இடையில் முரண்பாடு நிலவி வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அன்றைய தினம் இளைஞன் வசிக்கும் வீட்டுத்திட்டங்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் சில வீடுகள் சேதமடைந்திருந்தன.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை ஐந்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் முகங்களை மறைத்துக்கட்டியவாறு பத்துக்கும் மேற்பட்டவர்கள் வாள்கள் , கொட்டன்கள், இரும்புக்கம்பிகளுடன் வீட்டுத்திட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து வீடுகளின் ஜன்னல்கள் , வீட்டில் இருந்த உடமைகளை அடித்து நெருக்கி அட்டகாசம் புரிந்து, வீட்டில் இருந்தவர்கள் மேலும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த வன்முறை கும்பலின் தாக்குதலில் 07க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 24 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீட்டில் இருந்த உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் , 6 மோட்டார் சைக்கிள் , ஒரு வாகனம் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில்,

“எமது வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருக்கும் , கிராமத்தில் வசிக்கும் சில இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எமது வீட்டுத்திட்டத்திற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டவர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள். வெளியூரை சேர்ந்தவர்களை கிராமத்திற்குள் வரவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் கிராமத்தை தாண்டி வைத்தியசாலைக்கு செல்ல பயந்து வீடுகளில் மருந்து கட்டி வீடுகளில் இருக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடைபெறும் போது, பருத்தித்துறை காவற்துறையினருக்கு அறிவித்த போதும் , காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவே இல்லை.

மாலை 5 மணிக்கு பின்னர் தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் உரிமையாளர்கள் 16 பேர் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த பின்னரே இரவு காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மேலோட்டமாக விசாரணைகளை நடாத்தி விட்டு சென்றுள்ளனர்.” என தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More