Home இலங்கை யாழில் அனைத்து பொதுச்சந்தைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை  மீள திறக்கப்படும்

யாழில் அனைத்து பொதுச்சந்தைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை  மீள திறக்கப்படும்

by admin

யாழ் மாவட்டத்திலுள்ள  அனைத்து பொது சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக  எதிர்வரும் திங்கட்கிழமை  மீள திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்…..

யாழ் மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுச்சந்தைகளையும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என பலராலும் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் அவர்களும் சில பணிப்புரைகளையும் அறிவுறுத்தல்களையும் விடுத்திருக்கின்றார்.

அதனடிப்படையில் யாழில் முக்கியமான சந்தைகள் அமைந்திருக்கின்ற பிரதேச சபையினர், உள்ளுராட்சி அதிகார சபையின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம் அதனடிப்படையில்  தங்களுடைய சந்தை தொகுதிகளை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய  நடைமுறைகளை பின்பற்றி அவற்றை மீளத் திறப்பது குறித்து நடவடிக்கை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.

இது அநேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் அதாவது ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு பிற்பாடு இவற்றை அந்த இடங்களிலே திறந்து செயல்படுத்தக்கூடியவாறாக இருக்கும். அதே நேரத்தில் சுகாதாதார ஒழுங்கு விதிகளை  வியாபாரிகளும் அங்கு செல்லும் பொது மக்களும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.

சில விடயங்களை பொறுத்த வரையில் ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபையினருக்கும் கூறியிருக்கின்றோம் அந்தந்த பிரதேச செயலர்களுடன் அந்த பகுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும்  சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல் அல்லது அவர்களுடைய கண்காணிப்பின் கீழும் இந்த சந்தையினை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் சந்தைகள் யாவும் வழமை போன்று மக்களுக்கு சேவையாற்ற  திறக்கப்படவுள்ளது. அத்தோடு பொதுமக்கள் சுகாதார நடைமுறையிணையும் சமூக இடைவெளியினையும் பின்பற்றி  சந்தையினைபயன்படுத்திக் கொள்ளுமாறும் நான் கோரிக்கை விடுகின்றேன்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகப்பெரிய சந்தையாகிய திருநெல்வேலி சந்தை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என உள்ளூராட்சி சபையினரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து காலை 6 மணி தொடக்கம் 12 மணி வரையும் அப்பகுதி வீதியினை ஒரு வழிப்பாதையாக நடைமுறைப்படுத்துவதற்கும் நாம் போலீசாருக்கு அறிவுறுத்தல் வழங்கி யிருக்கின்றோம்.

எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சந்தை நடவடிக்கையை மேற் கொள்ளவேண்டுமென தெரிவித்தார்.  #யாழ்  #பொதுச்சந்தை  #கலந்துரையாடல்  #சுகாதார

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More