Home இலங்கை நாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு 

நாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு 

by admin

கருத்துச் சுதந்திரம் மற்றும் பொது சேவையின் சுயாதீனத் தன்மையை கட்டுப்படுத்தும் நோக்கில், ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச  இராணுவ ஆட்சி ஒன்றை நிறுவுவதற்கு எத்தனிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியின் அனைத்து உறுப்பினர்களும் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“சமூகக் குழுக்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விசாரணை” செயலணிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களானது கருத்து சுதந்திரத்தை இலக்கு வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையே எனவும்,  சிரேஷ்ட சட்டத்தரணியான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில், சமூக விரோத குழுக்கள் என எதனை ஜனாதிபதி வரையறைபடுத்துகின்றார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயமானது ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மதத் தலைவர்களை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த வார இறுதியில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இது மிகவும் ஆபத்தான நிலைமை என்று எச்சரித்துள்ளார்.

 “இது எங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது, ஏனென்றால் பொது சேவை ஒரு சுயாதீனமான அமைப்பாகுத். நம் நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைய பொது சேவை ஆணைக்குழுவால் அது நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து அரச பணியாளர்களும் குறித்த செலணியின் அறிவித்தல்களை செயற்படுத்த வேண்டுமெனக் குறிப்பிடுவது அரசியல் அமைப்பிற்கு முரணான விடயம்.  எமது நாட்டின் அரச சேவையின் சிரேஷ்டத்துவத்தைப் பொறுத்தவரை, அமைச்சின் செயலாளர்கள் ஆயுதப்படைகளின் தளபதிக்கு மேலாகவே உள்ளார்கள்” எனவும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி தாபிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2ஆம் திகதி ஸ்ரீலங்கா அரசின் வர்த்தமாணி அறிவித்தலில் வெளியானது.

பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன செயலணியின் தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் டீ.எம்.எஸ். திஸாநாயக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், பதில் காவல்துறை மா அதிபர் சீ.டீ விக்ரமரத்ன, சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) விஜித ரவிப்பிரிய, தேசிய புலனாய்வு பிரதாணி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், அரச புலனாய்வு தகவல் சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி, இராணுவ புலனாய்வுத் துறை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.எஸ். ஹேவாவிதாரண, கடற்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கெப்டன் எஸ்.ஜே.குமார, விமானப்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் எயார் கொமாண்டர் எம்.டி.ஜே. வாசகே, காவல்துறை விசேட பணியகத்தின் பிரதி காவல்துறை மா அதிபர் டீ.சீ.ஏ. தனபால மற்றும் பிரதி  காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். #இராணுவஆட்சி  #ஜனாதிபதி #குற்றச்சாட்டு  #கோத்தாபய #லக்ஸ்மன்கிரியெல்ல 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More