Home இந்தியா ஏழு பேரின் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

ஏழு பேரின் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

by admin

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஏழு பேரின் விடுதலை தொடர்பாகவும் பேரரிவாளனுக்கு பரோல் வழங்குவது தொடர்பாகவும் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கிய நீதிமனற்ம் வழக்கை ஜூலை 29ஆம்  திகதிக்கு ஒத்திவைத்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று பாதிக்கும் அபாயம் இருப்பதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  இதன்போது கடந்த 2019 நவம்பர் மாதம் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கப்பட்டதனால்  2 ஆண்டுகளுக்கு பின்னா்தான் தான் மீண்டும் பரோல் வழங்க முடியும் என  அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான  மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் பரோல் வழங்க 2 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசங்கள் நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவித்து, 2 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தார். #ராஜிவ்காந்தி   #கொலை #விடுதலை #ஆளுநர்  #பேரறிவாளன் #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More