Home இலங்கை வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டைத் தொழில் தடை செய்வதா இல்லையா ? செவ்வாயன்று கட்டளை

வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டைத் தொழில் தடை செய்வதா இல்லையா ? செவ்வாயன்று கட்டளை

by admin

நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சட்டத்துக்குப் புறம்பான தொழில்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மீதான கட்டளை வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வழங்கப்படும் என்று பருத்தித்துறை நீதிமன்றம் தவணையிட்டுள்ளது.

தென்னிலங்கை மீனவர்கள்  வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை பிடித்தலுக்கு தடை உத்தரவை கடந்த வருடம் பெற்றிருந்த நிலையில் இவ்வருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை எதிர்த்து மீண்டும் கடந்த 19ம் திகதி நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

வழக்கிற்கு நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் சமூகமளிக்காத காரணத்தால் வழக்கு இன்று வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் பருத்தித்துறை நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகி தமது விளக்கத்தை மன்றுரைத்தனர்.

உள்ளூர் கடற்தொழிலாளர்கள் சங்கங்கள் ஐந்து இது தொடர்பான அனுமதியை வழங்க உரித்துடையன. அவற்றால் எமக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளரால் தென்னிலங்கையைச் சேர்ந்த 57 மீனவர் படகுகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று நீரியல் வள அதிகாரிகள் மன்றுரைத்தனர்.

கடந்த வருடமும் இவ்வாறு உரிமம் வழங்கப்பட்டது. அவர்கள் வந்து கடற்தொழிலில் ஈடுபட்டனர். எனினும் அவர்களுக்கு வழங்கிய உரிமத்தில் உள்ள உள்ளக முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி இந்த நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்தது.

அதன்பின்னர் வடமராட்சி கடற்பரப்பிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேறியிருந்தனர். அதனால் இந்த நீதிமன்றால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு கட்டளை நீடிக்கப்படாமல் கைவிடப்பட்டுவிட்டது. எனவே அவ்வாறான கட்டளையை மீளவும் வழங்கவேண்டும் என்று ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்தார்.இருதரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்து கட்டளை வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி வழங்கப்படும் என்று தவணையிட்ட நீதிமன்று, வழக்கை ஒத்திவைத்தது #வடமராட்சி  #கடற்பரப்பில் #கடலட்டைத்தொழில் #தடை, # தென்னிலங்கை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More