Home இலங்கை ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை – நுவரெலியாவில் போராட்டம்

ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை – நுவரெலியாவில் போராட்டம்

by admin

(க.கிஷாந்தன்)

பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களாக 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற சுமார் 600 ஆசிரியர்கள் தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தி இன்று (27.08.2020) நுவரெலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

2015 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இவர்கள் தங்களுடைய மேற்படிப்பை பூர்த்தி செய்தவுடன் இவர்களை ஆசிரியர்களாக உள்வாங்குவது என தீர்மானிக்கப்பட்டு இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இவர்கள் கொட்டகலை யதன்சைட் ஆசிரியர் பயிற்சி கல்லூரி அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய கல்லூரிகளில் தங்களுடைய பயிற்சிகளை 2018ஆம் ஆண்டு நிறைவு செய்து கொண்டார்கள்.

அப்படி நிறைவுசெய்து கொண்ட பலரும் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டு அவர்களுடைய நிலுவையும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான நிரந்தர நியமனமும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நுவரெலியாவில் இருக்கின்ற 600 ஆசிரிய உதவியாளர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படாமல் ஆசிரியர்களாக உள்வாங்கபடாமல் இருந்து வருகின்றார்கள்.

இவர்களுக்கு வெறுமனே மாதாந்தம் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுகின்றது.

ஏனைய மாவட்டங்களில் ஆசிரிய உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் பயிற்சிகளை நிறைவு செய்த பின்பு அவர்கள் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான நிலுவைத் தொகையையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆசிரியர்கள் தங்களையும் ஆசிரியர்களாக உள்வாங்கி தங்களுடைய நிலுவைத் தொகையையும் தங்களுடைய நிரந்தர நியமனத்தையும் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து 27.08.2020 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில் எங்களுடைய இந்த போராட்டம் வெற்றி அடையாத சந்தர்ப்பத்தில் தாங்கள் எதிர்வரும் காலத்தில் மத்திய மாகாண கல்வி செயலாளரின் காரியாலயத்திற்கு முன்பாக காரியாலயத்தை முடக்கும் வண்ணம் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பலரும் தங்களுடைய நியமனத்தை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி இருந்தாலும் இதுவரை அவர்கள் எதுவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

இதுதொடர்பாக நுவரெலியா வலயக்கல்விப் பணிப்பாளர் அமரசிரி பியதாசவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது இன்றைய போராட்டம் தொடர்பாக தனக்கு கடிதம் மூலம் யாரும் அறிவிக்கவில்லை எனவும் ஆனால் இவர்களுடைய நிரந்தர நியமனம் தொடர்பாக மத்திய மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார் #ஆசிரியர்கள் #நிரந்தரநியமனம் #நுவரெலியா #போராட்டம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More