Home இலங்கை மட்டக்களப்பில் தடைகளை தகர்த்து அணி திரண்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…

மட்டக்களப்பில் தடைகளை தகர்த்து அணி திரண்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…

by admin


மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற தடை மற்றும் காவற்துறையினரின் தடைகளை கடந்து, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டள்ளது.


சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடுகளை செய்திருந்தது.
அதன் அடிப்படையில், மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இருந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை – 30.08.20) காலை பேரணி ஆரம்பமாகும் எனவும், அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பேரணியில் கலந்துகொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளினால் மட்டக்களப்பு காவற்துறையினர் மற்றும் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினரால் குறித்த பேரணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்று ஊடாக தடையுத்தரவு கோரப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டது.
எனினும், இன்று காலை கல்லடிப் பாலத்திற்கு அருகில் குறித்த பேரணியில் கலந்துகொள்ளச்சென்ற மக்களை அங்கிருந்து செல்லுமாறு மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினர் அச்சுறுத்தல்களை விடுத்தும், கல்லடி பாலத்திற்கு அருகில் திரண்ட பெருமளவான மக்கள் ஊர்வலம் செல்ல முயற்சித்த வேளை காவற்துறையினர் அவற்றினை தடுத்து நிறுத்தியும் பலப்பிரயோகங்களை மேற்கொண்டனர்.


இதன்போது, நீதிமன்ற தடையுத்தரவினை வாசித்துக் காட்டிய காவற்துறையினர் நீதிமன்ற தடையினை மீறி ஊர்வலம் சென்றால் கைதுசெய்யப்படுவார்கள் என எச்சரித்தனர்.
இதேவேளை இங்கு கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி த.செல்வராணியை கைதுசெய்யும் முயற்சியை அங்குகூடிய மக்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.


விடுதலைப்புலிகள் மீள் எழுச்சி பெறுவார்கள் எனக் கூறி தமது போராட்டத்திற்கு தடையுத்தரவு வாங்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளை அழித்ததாக பிரதமர் மகிந்தராஜபகஷ கூறியுள்ள நிலையில் “60 வயதுக்கு மேற்பட்ட கிழவிகள் சேர்ந்தா விடுதலைப் புலிகள் அமைப்பை மீள அமைக்கப்போகின்றோம்” என காவற்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி த.செல்வராணி கேள்வி எழுப்பி உள்ளார்.


“நாங்கள் எங்களின் கைகளினால் ஒப்படைத்த பிள்ளைகளையும் கணவன்மாரையும் எங்களிடம் மீண்டும் ஒப்படையுங்கள் என்றே போராடுகின்றோம்” எனவும் அவர் இதன்போது காவற்துறையினரிடம் அவர் வலியுறுத்தி உள்ளார்.


இதேவேளை, கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்த புனித செபஸ்தியார் ஆலயத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடியிருந்ததுடன் இதில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் குறித்த தேவாலயப்பகுதியில் திரண்டிருந்தனர். அத்துடன் கல்லடி பாலத்திற்கு அருகில், கலகம் அடக்கும் காவற்துறையினரும் பெருமளவான காவற்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, தேவாலய வாசல்கதவுகளை மூடப்பட்டதுடன் பேரணி செல்லாத வகையில் அப்பகுதியில் கலகம் அடக்கும் காவற்துறையினரும் பெருமளவான காவற்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, உறவுகள் எந்த செயற்பாடுகளை மேற்கொண்டாலும் தன்னால் ஆதரவு வழங்கமுடியும் எனத் தெரிவித்தார்.


இதன்போது, தேவாலயத்தில் இருந்து மக்கள் பேரணியாக செல்லமுற்பட்டபோது பெருமளவான காவற்துறையினர் குவிக்கப்பட்டு தேவாலயத்தின் முன் வாயில் கதவு பொலிஸாரினால் மூடப்பட்டது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொலிஸாருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் நீதிமன்ற தடையுத்தரவு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அமலநாயகிக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது.


எனக்கு வழங்கப்படவில்லையெனத் தெரிவித்து காவற்துறையினரையும் தள்ளியபடி வாயில் கதவினை வலுக்கட்டாயமாக திறந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பேரணியை நடத்திச்சென்றார்.


இதன்போது, பல இடங்களில் பேரணியை காவற்துறையினர் தடுக்கமுற்பட்டபோதும், கலகமடக்கும் காவற்துறையினரைக் கொண்டும் பேரணியை தடுக்கமுற்பட்டபோதும் பேரணி தொடர்ந்து நடைபெற்றது.


மேலும், மட்டக்களப்பு பிரதான வீதி, புகையிரத வீதியுடாகச் சென்று தாண்டவன்வெளி சந்தி ஊடாக சென்று திருமலை வீதியுடாக காந்திபூங்கா வரை பேரணி சென்று, அங்கு போராட்டம் நடைபெற்றது.

விடுதலைப் புலிகளையும் கொரோனாவினையும் காரணம் காட்டி தமது போராட்டத்தினை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.


இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதற்கான மகஜர் ஒன்று, வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் அமைப்பின் கிழக்கு மாகாண பிரதிநிதிகளினால், மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More