Home இலங்கை விசேட அதிரடிப் படையினருக்கு கப்பம் வழங்க முற்பட்ட இருவர் கைது

விசேட அதிரடிப் படையினருக்கு கப்பம் வழங்க முற்பட்ட இருவர் கைது

by admin

சட்டவிரோதமாக சுருக்குவலையை கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினருக்கு 40 ஆயிரம் ரூபா கப்பம் வழங்க முற்பட்ட இருவர் கைதாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி காவல்துறை எல்லைக்குட்பட்ட கடற்கரையோரங்களில் அண்மைக்காலமாக சுருக்குவலை பயன்பாடு அதிகரித்துள்ளதாக மீனவர்களின் குற்றச்சாட்டுக்களை அடுத்து விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த களுவாஞ்சிக்குடி  களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் தலைமையதிகாரி காவல்துறைப் பரிசோதகர் ரி.எம்.எம்.யு.கே.வி தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் நேற்று வியாழக்கிழமை(17) இரவு 9 மணியளவில்   குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.

இதன் போது கடற் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஒருதொகுதி சுருக்குவலைகளை  மீட்டுள்ளதுடன் சந்தேக நபரான ஒருவரையும் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்த குற்றச்சாட்டில் இருந்து தப்பி கொள்வதற்காக கைதான இடத்தில் வைத்து  குறித்த  விசேட அதிரடிப்படையின் தலைமை அதிகாரிக்கு தனது உறவினர் ஊடாக ரூபா 40 ஆயிரம் கப்பம் வழங்க முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த கப்பம் வழங்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட நபர் உள்ளடங்களாக இரு சந்தேக நபர்களும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு களுவாஞ்சிக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இவ்வாறு கைதான இரு சந்தேக நபர்கள் தொடர்பில்  மட்டக்களப்பு மாவட்ட  கடற்றொழிற் திணைக்களத்தின் பிரதேசத்திற்குப் பொறுப்பான கடற்றொழில் பரிசோதகர் குழுவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசேட அதிரடிப்படையினருடன்  இணைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் கைப்பற்றப்பட்ட சுருக்கு வலை தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட சுருக்கு வலை சுமார்  பல இலட்சம் ரூபாய் பெறுமதி எனவும்  அவற்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிற் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில்  கடற் பிராந்தியத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதியற்ற சுருக்குவலைகளை சிலர் பயன்படுத்துவதாககவும்  அவற்றைத் தடை செய்யுமாறும் கோரி கரைவலை மீனவர்கள்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது தவிர மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை, தேத்தாத்தீவு,களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், உள்ளிட்ட கடற் பிராந்தியங்களில் சட்டவிரோதமான முறையில் சிலரால் சுருக்கு வலை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. #சட்டவிரோத #அதிரடிப்படையினா் #கப்பம் #கைது #களுவாஞ்சிக்குடி #சுருக்குவலை


Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More