Home இலங்கை மாவீரர் நாள் – யாழ் நீதிவான் நீதிமன்றின் கட்டளை செவ்வாயன்று

மாவீரர் நாள் – யாழ் நீதிவான் நீதிமன்றின் கட்டளை செவ்வாயன்று

by admin

நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன. அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் காவல்துறையினா் தாக்கல் செய்த விண்ணப்பங்கள் மீதான கட்டளை வரும் 24ஆம் திகதி செவ்வாய்கிழமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் இன்று மன்றில் முன்னிலையாகாத பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை வழங்கவும் நீதிமன்று உத்தரவிட்டது.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறையினா் தாக்கல் செய்தனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்லை நடத்தவுதற்கு தடை கேட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா பார்த்திபன், மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட 38 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த மாவீர்ர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும் என்றுகாவல்துறையினா் விண்ணப்பத்தில் கேட்டுள்ளனர்.

அத்துடன் கோவிட் -19 தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தையும் பொலிஸார் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

பிரதிவாதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ் உள்ளிட்டோர் முன்னிலையாகி காவல்துறையினரின் விண்ணப்பத்துக்கு கடுமையான ஆட்சேபனையை முன்வைத்தனர்.

குற்றவியல் நடபடி சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற விடயத்துக்குள் நினைவேந்தலைக் கொண்டுவர முடியாது என்றும் குற்றம் ஒன்று நடைபெறப்போகுது என்றும் அதனைத் தடுக்க கட்டளை வழங்குமாறும் கற்பனையில் காவல்துறையினா் கோர முடியாது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பணம் செய்தார்.

கடந்த 4 வருடங்களாக காவல்துறையினா் குறிப்பிடும் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன என்றும் அப்போது நினைவேந்தல் நடத்திய குற்றச்சாட்டில் தன்னை கைது செய்யவில்லை என்றும் இப்போது அந்தச் சட்டங்களை தான் மீறுவேன் என்று காவல்துறையினா் எவ்வாறு மன்றுக்கு சுட்டிக்காட்டுவார்கள் என்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சமர்ப்பணம் செய்தார்.

காவல்துறையினரால் கூறப்பட்டுள்ள சட்டங்களை மீறாது தனது குடும்பத்துடன் உறவுகளை நினைவுகூருவேன் என்று சட்டத்தரணி கே.சுகாஷ் மன்றுரைத்தார்.
இந்த நிலையிலேயே கட்டளைக்காக வழக்கு வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது #மாவீரர்நாள் #கட்டளை #தமிழீழவிடுதலைப்புலிகள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More