Home உலகம் கிழக்கு சிரியாவில் பேருந்து மீது தாக்குதல், 28க்கு மேற்பட்டோர் பலி…

கிழக்கு சிரியாவில் பேருந்து மீது தாக்குதல், 28க்கு மேற்பட்டோர் பலி…

by admin

கிழக்கு சிரியாவில் பேருந்து ஒன்று தாக்கப்பட்டதில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிப்பாய்கள் என்று கூறப்படுகிறது.

எனினும், இறந்தவர்கல் அனைவரும் குடிமக்கள் என சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

பதற்றம் மிகுந்த டெய்ர் அல்-ஜோர் மாகாணத்தில் நேற்று புதன்கிழமை (30.12.20) நடந்த இந்த தாக்குதலின் போது, பேருந்தில் சிப்பாய்கள் இருந்ததாகவும், இறந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகம் எனவும் கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட பிற தரப்புகள் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் ‘சிரியன் ஒப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ்’ என்ற மனித உரிமை அமைப்பு ஐ.எஸ். அமைப்புடன் இந்த தாக்குதலை தொடர்பு படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 37 என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இது இஸ்லாமிக் ஸ்ரேற் (ஐ.எஸ்.) அமைப்பு நன்கு திட்டமிட்டு நடத்திய திடீர் தாக்குதல் என்றும், அரசுக்கு ஆதரவான ஆயுதப் படையினர், சிப்பாய்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டது என்றும், தகவல் மூலாதாரங்களை மேற்கோள் காட்டி இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டும் பிற தரப்பினரும் அந்தப் பேருந்துகளில் சிரியாவின் அரசுத் துருப்புகளான சிரியாவிந் இருந்ததாக கூறுகின்றன.

புராதன பல்மைரா நகருக்கு அருகில் உள்ள இந்தப் பகுதியில் ஐ.எஸ். அமைப்பினரும் ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு ஆதரவான சிரியாவின் துருப்புகளும் இடையிட்டு மோதுவார்கள்.

2014ம் ஆண்டு ஒரு கட்டத்தில் மேற்கு சிரியாவில் இருந்து கிழக்கு இராக் வரை பரவியிருந்த 88 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கட்டுப்படுத்தி பல லட்சக் கணக்கான மக்கள் மீது கொடூரமான ஆட்சியை ஐ.எஸ் நடத்தியது .


அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்ற உள்ளூர் படையினர் 5 ஆண்டுகள் போரிட்டு ஐ.எஸ். வசமிருந்த எல்லா பகுதிகளையும் மீட்டன. சிரியா, இராக் நாடுகளில் ஐ.எஸ். வசமிருந்த எல்லா பிராந்தியங்களும் கைப்பற்றப்பட்டதாக 2019 மார்ச்சில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், 2011 முதல் உள்நாட்டுப் போரினால் அலைகழிக்கப்படும் சிரியாவின் சில பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பு தன்னை தக்கவைத்துக்கொண்டது. தொடர்ந்து அது தாக்குதல்களையும் நடத்திவருகிறது.

புதன்கிழமை நடந்த தாக்குதலை மேற்கொண்டது ஐ.எஸ்.தான் என்பது உறுதி செய்யப்பட்டால், 2020ம் ஆண்டில் அந்த அமைப்பு நடத்திய மோசமான தாக்குதல் இதுதான் என்கிறது சிரியன் ஒப்சர்வேட்டரி அமைப்பு.

BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More