Home இந்தியா தமிழர்களின் உணர்வை ரணப்படுத்தும் இனவெறியினரின் இழிசெயல் கண்டனத்திற்குரியது – இபிஎஸ்! ஒபிஎஸ்!

தமிழர்களின் உணர்வை ரணப்படுத்தும் இனவெறியினரின் இழிசெயல் கண்டனத்திற்குரியது – இபிஎஸ்! ஒபிஎஸ்!

by admin

யாழ்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தங்களின் ட்விட்டர் பக்கங்களின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் போர் நிகழ்ந்த போது கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்ந்த இனப்படுகொலையின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைப்பகுதியில் நினைவுத் ஸ்தூபி அமைக்கப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த நினைவிடம் தற்போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில், இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிவிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்

ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

ஜனவரி 11 ஆம் திகதி இலங்கை துணைத் தூதரகம் முற்றுகையிடப்படும்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வரும் 11 ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக்கூடாது என்பதற்காக நினைவு முற்றத்தை சிங்கள அரசு இடித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

“இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம்”

யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தொல்.திருமாவளவன் , “இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இலங்கை அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி மீண்டும் நிறுவப்பட வேண்டும்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஓரிரு நாட்களில் இச்சம்பவம் நடந்திருப்பது, இந்தியாவை இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

சீன அரசின் கூட்டாளியாக மாறி இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் இலங்கை அரசை, இந்தியா இப்போதும் நட்பு சக்தியாகக் கருதுவதும், தமிழர்களின் நலனை முற்றாகப் புறக்கணிப்பதும் சரியான அணுகுமறை அல்ல என்பதை சுட்டிக்காட்டுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More