Home இலங்கை இலங்கையில் முகநூல் பதிவுக்காக கைதான, தமிழ் ஊடகவியலாளரை விடுவிக்க கோருகிறது RSF…

இலங்கையில் முகநூல் பதிவுக்காக கைதான, தமிழ் ஊடகவியலாளரை விடுவிக்க கோருகிறது RSF…

by admin

முகநூல் பதிவுக்காகக் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு பாரிஸை தளமாகக் கொண்ட ‘எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு’ (Reporters Without Borders – RSF) இலங்கை அரசிடம் கேட்டிருக்கிறது. மட்டக்களப்பைச் சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளர் முருகுப்பிள்ளை கோகுலதாசன் என்பவரையே விடுதலை செய்யுமாறு கோரி RSF அமைப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:ஜனவரி 16 ஆம் திகதி ஐம்பதாவது நாளை சிறையில் நிறைவு செய்யும் முருகுப்பிள்ளை கோகுலதாசன் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு முகநூல் பதிவுக்காக ரகசியமான முறையில் கைது செய்யப்பட்டார்.

இச் சட்டம் பெரும்பாலும் பத்திரிகையாளர் களை மௌனிக்கச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்ற கடுமையான சட்டம். 2009 இல் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களது படங்களை முகநூலில் வெளியிட்டதாகவே அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் வேறு வட்டாரங்கள் ஊடாக எமக்குத் தனித்தனியே கிடைத்த ஆதாரங்களின்படி அவர் ஆண்டு தோறும் நவம்பர் மாதங்களில் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட சிறுபான்மைத் தமிழர்களை நினைவுகூருகின்ற நிகழ்வு தொடர்பான ஒரு பதிவையே வெளியிட்டிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

“முருகுப்பிள்ளை கோகுலதாசனின் கைதும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அவரைத் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதும் ஊடக சுதந்திரத்தின் மீதான மீறல் என்பதை வெளிப்படை யாகக் காட்டுகின்றன”என்று RSF அமைப்பின் ஆசிய பசுபிக் பிரிவின் பொறுப்பாளர் டானியல் பஸ்ராட்(Daniel Bastard) தெரிவித்திருக்கிறார்.

கோகுலதாசனை உடனடியாக, நிபந்தனை ஏதும் இன்றி விடுவிக்க உத்தரவிடுமாறு இலங்கையின் சட்டமாஅதிபரைக் கேட்டுக் கொள்கின்றோம். தமிழர் பிரச்சினையை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்துகின்றஊடகவியலாளர்களைப் பாதுகாப்புப் படைகள் துன்புறுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.

வெளிநாட்டுகளில் தமிழ் புலிகளிடம் இருந்து பணம் பெற்றனர் என்று தெரிவித்து ஓராண்டுக்கு முன் மட்டக்களப்பில் ஏழு ஊடகவியலாளர் களது தகவல்கள் வட்டமிடப்பட்ட அவர்களது தலைகளின் படங்களுடன் துண்டுப் பிரசுரமாக வெளியிடப்பட்டன. அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டைப் பதிவு செய்வதற்கோ அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கோ பொலீஸார் மறுத்து விட்டனர்.-இவ்வாறு RSF தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.13-01-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More