Home இலங்கை கிழக்கில் காணிகளை வழங்கிய அரசிற்கு நட்டம்!

கிழக்கில் காணிகளை வழங்கிய அரசிற்கு நட்டம்!

by admin

யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்களுக்குப் பின்னரும், கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் காணியற்று இருக்கின்ற நிலையில், முதலீட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை அரசாங்கம் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நீண்டகால வரி சலுகையின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டம் – குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் ஊடாக அரசுக்கு கிடைக்க வேண்டிய 348 மில்லியன் ரூபாய் நிதியை செலுத்த அவர்கள் தவறியுள்ளதாக காணி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 9 செவ்வாய்க்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் எஸ். எம் சந்திரசேன இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குச்சவெலி பிரதேச செயலகம், கும்புருப்பிட்டி கிழக்கு (240 பி) கிராம சேவகர் பிரிவு, புல்மோட்டை – திருகோணமலை பிரதான வீதியில் உள்ள இரக்கண்டி பாலம், சலபேஆறு பாலம் மற்றும் கடற்கரைக்கும் பிரதான வீதிக்கும் இடையிலான பிரதேசங்களில் அமைந்துள்ள, அரச காணிகளை பயன்படுத்தும் ஏழு நபர்களிடமிருந்து மாத்திரம் அரசாங்கத்திற்கு சுமார் 17 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த நபர்கள் யார் என்பது குறித்த தகவல்களை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை.

எவ்வாறெனினும், இலட்சக்கணக்கான நிலமற்ற மக்களுக்கு காணிகள் வழங்கப்படும், அவர்களுக்கு உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படும், மேலும் இந்த வருடம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம். சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

நிலமற்ற மக்கள்

யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினர் அத்துமீறி ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுவிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சரோ அரசாங்கத் தகவல் திணைக்களமோ தகவல் எதனையும் வெளியிடவில்லை.

அரசாங்க புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், உயர் ஸ்தானிகர் மைக்கேல் பெச்லெட், அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த சுமார் 90 சதவீத காணிகள் மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

“2009இல் கைப்பற்றப்பட்ட அரச காணிகளில் 89.26 சதவீதமும், தனியார் காணிகளில் 92.22 சதவீதமும் 2019 டிசம்பர் 31ற்குள் மீளப் பெறப்பட்டுள்ளன” என அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களை ஏற்க மறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சிவஞானம் ஸ்ரீதரன், உயர் ஸ்தானிகரின் அறிக்கை வெளியாகி ஒரு வருடத்தின் பின்னரும், முப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 8,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இதுவரை உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் இன்னமும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, இதனால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருந்தார்.

“ஆகவே இவ்வளவு பெரிய அளவில் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத் தகவல்களின் அடிப்படையில் ஒரு அறிக்கையை உருவாக்கி அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது உயர்ஸ்தானிகருக்கு நியாயமான செயற்பாடாக அமையாது. 2015 இலும் இதுவே நடந்தது. அரசாங்கம் முன்னேறி வருகிறது, முன்னேறுகிறது, முன்னேறுகிறது, எனக் குறிப்பிடப்பட்டாலும், அடைந்த முன்னேற்றம் எதுவுமில்லை.

அரசாங்க காணிகள் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது அல்லது பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், பொருத்தமான நபர்களுக்கு விதிமுறைகளின்படி அந்த நிலங்களுக்கான சட்ட ரீதியான உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் ஏனைய காணிகள் விவசாய மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்த அனாதைகளுக்கு இன்னமும் காணி இல்லை

வடக்கில் யுத்தம் முடிவடைந்து சுமார் 12 வருடங்களுக்குப் பின்னரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 400ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னமும் அகதி முகாம்களில் வசித்து வருவது அண்மையில் தெரியவந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரிய மையங்களில் உள்ள 409 குடும்பங்களில் 233 குடும்பங்கள் காணியுரிமை அற்ற குடும்பங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More