Home இலங்கை அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய தமிழ்க் குடும்பத்தினருக்கு வெற்றி

அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய தமிழ்க் குடும்பத்தினருக்கு வெற்றி

by admin

இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் அவுஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து தங்கலாம் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


ஈழத் தமிழர் நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா ஆகிய இருவரும் கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் தனித்தனியாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு புலத்பெயா்ந்து மெல்போர்னில் உள்ள முகாமில் தங்கி இருந்தபோது காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து இருவருக்கும் அங்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது மூத்த மகள் கோபிகாவுக்கு 6 வயதும், இரண்டாவது மகளான தருணிகாவுக்கு 4 வயதுமாகின்றது.

இந்நிலையில், இவா்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசாக் காலம் முடிந்துவிட்டதால், அவர்களை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்திரேலியாவின் கன்சர்வேட்டிவ் அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அவா்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசு அனுப்ப முடிவு செய்தது. ஆனால், இலங்கையில் பிறந்த நடேசலிங்கத்துக்கும், அவரின் மனைவி பிரியாவுக்கும் மட்டுமே இலங்கையில் குடியுரிமை உள்ளது.

அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் இரு குழந்தைகளுக்கும் இலங்கை அரசு குடியுரிமை வழங்காது என்பதுடன் அவுஸ்திரேலிய அரசும் குடியுரிமை வழங்காது என்பதனால் அவா்கள் தங்கள் பெற்றோருடன் இலங்கைக்குச் சென்றாலும் இரு குழந்தைகளும் நாடற்றவர்களாகவே இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இது தொடா்பில் அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முறையிடப்பட்ட நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹீதர் ரிலே, அந்தக் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தத் தடை விதித்திருந்தாா். எனினும் ஆனால், அவர் இந்த உத்தரவினை பிறப்பிக்கும்போது, விமானம் அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை விட்டு இலங்கை நோக்கிப் புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்தது.

இந்தநிலையில் அதிகாாிகள் நீதிபதியிடம் விமானம் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவித்த போதும் நீதிபதி ஹீதர் அதற்குச் சம்மதிக்காமல் விமான நிலையத்துக்குத் தொலைபேசியில் பேசி விமானத்தை உடனடியாகத் தரையிறங்க உத்தரவிட்டார்.

அதன்பின் தரையிறங்கிய விமானத்தில் இருந்து நடேசன் குடும்பத்தினர் மெல்போர்ன் நகரில் தங்கவைக்கப்பட்டனர். தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்தக் கூடாது எனக் கோரி மெல்போர்ன் நகரில் அவுஸ்திரேலிய மக்கள் மிகப்பெரிய அளவில் பேரணியும், போராட்டமும் நடத்தியிருந்தனா்.

நாடு கடத்துவதை எதிர்த்து வழக்கு

கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவில் அகதிகள் வசிக்கும் கிறிஸ்மஸ் தீவில் தங்கியுள்ள நடேசன், பிரியா குடும்பத்தினர் தங்களை நாடு கடத்தத் தடைவிதிக்கக் கோரி அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனுவை எதிர்த்து அவுஸ்திரேலிய அரசும் வழக்குத் தொடர்ந்தது. பெடரல் நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள்அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில் தமிழ்க் குடும்பத்தினர் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் தங்கலாம் எனவும் அவுஸ்திரேலியாவில் பிறந்த இரு குழந்தைகளுக்கு விசா வழங்க மறுக்கக் கூடாது எனவும் உத்தவிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்க் குடும்பத்தினர் தங்கள் மகள்களுக்கு விசாவுக்கு விண்ணப்பித்து விசா பெறலாம் என்பதுடன் அவா்கள் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவுஸ்திரேலிய அரசு உயர் நீதிமன்றம் சென்றாலும் மேல்முறையீடு ஏற்கப்படுமா என்பது சந்தேகம் என்பது குறிப்பிடத்தக்கது. #அவுஸ்திரேலியஅரசு #சட்டப்போராட்டம் #தமிழ்க்குடும்பம் #வெற்றி #நாடுகடத்த #ஈழத்தமிழர் #நடேசன்_குடும்பத்தினர்

மூலம் இந்து தமிழ்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More