Home இலங்கை P2P தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க கூடாது என கோர முடியாது

P2P தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க கூடாது என கோர முடியாது

by admin

புலன்விசாரணைகளை ஆரம்பிக்க அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க அடிப்படை  சட்டத்தேவைப்படுகள் இல்லாத நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருக்க கூடாது என நாம் எமது வாதத்தை முன் வைத்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். 


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நீதிமன்ற உத்தரவை மீறி முன்னெடுக்கப்பட்டு , நீதிமன்ற அவமதிப்பை மேற்கொண்டார்கள் என பருத்தித்துறை , நெல்லியடி காவல்துறையினா்  பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 


குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்க கூடாது என கோரி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் தொடர்பிலான விசாரணையில் இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் காவல்துறையினாின் பதிலுக்காக திகதியிடப்பட்டிருந்த நிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 


அதன் போது, பிரதி மன்றாடி அதிபதி காவல்துறையினா் சார்பாக முன்னிலையாகி இருந்தார். குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவிக்கையில், 


குறித்த விண்ணப்பம் தொடர்பில்  பிரதி மன்றாடி அதிபதி  தனது பூர்வாங்க ஆட்சேபனையை தெரிவித்தார். இந்த விண்ணப்பத்தை செய்தவர்களுக்கு வழக்கெழு தகமை இல்லை. பி அறிக்கை மாத்திரமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எவரையும் சந்தேக நபர்களாக குறிப்பிடவில்லை. எனவே இந்த விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து நடத்த முடியாது என அவர்களால் கேட்க முடியாது என பூர்வாங்க ஆட்சேபனையை தெரிவித்தார்.


அதற்கு பதிலாக நாம் பி அறிக்கையில் இருவரின் பெயர் குறிப்பிடப்பட்டு , அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை புரிந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் என அவர்களை குறிக்கா விட்டாலும் இந்த நபர்கள் இந்த குற்றத்தை புரிந்துள்ளார்கள் என சொல்லப்பட்டுள்ளது.

ஆகையால் அவர்களுக்கு வழக்கெழு தகமை இருக்கின்றது எனவும் அவர்கள் இந்த விடயத்தில் அக்கறை உள்ளவர்கள் எனும் ரீதியில் அவர்கள் விண்ணப்பம் செய்ய முடியும். 


புலன் விசாரணைகளை ஆரம்பிக்க , நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு  சட்டத்தின் அடிப்படை தேவைப்பாடுகள் உள்ளன. அந்த சட்ட தேவைப்பாடுகள் எழாத நிலையில் இந்த வழக்கு அல்லது நீதிமன்ற நடவடிக்கை ஆரம்பமாகி இருக்க கூடாது என்பதே எங்களுடைய வாதமாகும்.


அரச தரப்பின் பூர்வாங்க ஆட்சேபனை சம்பந்தமாக மேலதிகமாக எழுத்து மூல சமர்ப்பணம் செய்வதற்கு கோரப்பட்டதை அடுத்து இரு தரப்பினருக்கும் நாலு வார காலம் எழுத்து மூல சமர்ப்பணத்தினை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
அதனை தொடர்ந்து பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்கும். என தெரிவித்தார். #P2P #விசாரணைகளை #பொத்துவில் #பொலிகண்டி #போராட்டம் #சுமந்திரன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More