Home இலங்கை தண்டணையாக மாறிய தனிமைப்படுத்தல் ? நிலாந்தன்.

தண்டணையாக மாறிய தனிமைப்படுத்தல் ? நிலாந்தன்.

by admin

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யப் போவதாக கூறிவரும் அரசாங்கம் தென்னிலங்கையில் தனக்கு எதிராகப் போராடிய செயற்பாட்டாளர்களைத் தனிமைப்படுத்தற் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருந்து நேற்று முன்தினம் விடுவித்தது.பௌலிங்-bowling விளையாட்டில் ஒரே அடியில் பல இலக்குகளை விழுத்துவதைப் போல அரசாங்கமும் தனிமைப்படுத்தல் சட்டத்தை வைத்து தனது அரசியல் எதிரிகளை வீழ்துகிறது. என்ற தொனிப்பட ஒரு சிங்களக் கார்ட்டூனிஸ்ட் அண்மையில் ஒரு கார்ட்டூன் வரைந்திருக்கிறார்.

தனிமைப்படுத்த சட்டத்தை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக எப்பொழுதோ பயன்படுத்த தொடங்கி விட்டது. வைரஸ் தொற்றுக் காலத்தை சாட்டாக வைத்து தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை நிராகரிப்பதில் தொடங்கி தமிழ் மக்களுடைய எதிர்ப்புப் போராட்டங்களின்போது அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தை பயங்கரவாதத் தடைச்சட்டம் போல பயன்படுத்தியது.இதில் விதிவிலக்காக காணப்படுவது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணிதான். அங்கேயும்கூட தொடக்கத்தில் அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் மூலம் போராட்டத்துக்கு தலைமை தாங்கக்கூடிய நபர்களை முடக்கப்பார்த்தது. ஆனால் பேரணி அதிகம் மக்கள்மயப்பட்ட காரணத்தால் ஒரு கட்டத்தில் அது அரசாங்கத்தால் தடுக்க முடியாத ஒரு எல்லைக்கு போய்விட்டது. ஆனால் அதுவல்லாத ஏனைய எல்லாப் போராட்டங்களின்போதும் அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தை உபயோகித்து பெரும்பாலான போராட்டங்களை தடுத்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கிறது.

இது இப்பொழுதுதான் சிங்கள கார்ட்டூனிஸ்ட்களுக்கு தெரிகின்றதா?கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளை முடக்கியதில் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கும் ஒரு பங்குண்டு. அதைவிட முக்கியமாக அவ்வாறு எதிர்ப்புக் காட்டத் தேவையான சக்தி எதிர்க்கட்சிகளிடமும் இருக்கவில்லை.இவ்வாறானதொரு பின்னணியில் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்த்துப் போராடிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு முதலில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டார்கள்.அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.எனினும் அவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அதாவது நோயற்ற ஒருவரை நோயாளியாக்கும் புதிய தண்டனை முறை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தனிமைப்படுத்தல் சட்டங்களை தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் பயன்படுத்தியது. தமிழ் மக்களை ஒடுக்க அவர்களுக்கு ஒரு சட்டம் தேவை. அது பயங்கரவாத தடைச்சட்டமாகவும் இருக்கலாம் அல்லது தனிமைப்படுத்தல் சட்டமாகவும் இருக்கலாம். ஏதோ ஒரு சட்டத்தை முன்வைத்து அவர்கள் தமிழ் மக்களின் போராட்டங்களை ஒடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதைத்தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் செய்தார்கள்.பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மறுபரிசீலனை செய்வதென்பது ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தின் நேரடி விளைவு. ஆனால் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்யப் போவதாகக் கூறப்படும் ஒரு காலகட்டத்தில்தான் தனிமைப்படுத்தல் சட்டத்தை உபயோகித்து போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன. எனவே இங்கு ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. பயங்கரவாத பயங்கரவாதத் தடைச்சட்டம் இல்லையென்றாலும் அவர்களுக்கு போராட்டங்களை நசுக்க வேறு ஏதோ ஒரு சட்டம் இருக்கும் என்பதுதான். இது எதைக் காட்டுகிறது ?
ஒடுக்கும் மனோநிலையைத்தான் காட்டுகிறது. அந்த மனோநிலையானது எப்பொழுதும் தனக்கு வசதியாக சட்டங்களை உருவாக்கிக் கொள்ளும். எனவே இங்கே பிரச்சினை என்னவென்றால் சட்டங்கள் அல்ல. சட்டங்கள் கருவிகளே. பிரச்சினையாக இருப்பது அந்த கருவிகளைப் பயன்படுத்தி ஒடுக்கும் மனோநிலைதான்.


அண்மையில் ஒரு சிவில் சமூக செயற்பாட்டாளர் என்னிடம் சொன்னார். “தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்திகள் புகைய தொடங்கிவிட்டன. ஒரு கட்டத்தில் அவை நெருப்பாக மூளும். அரசாங்கத்துக்கு எதிரான இத்திரட்சியில் தமிழ் மக்களும் பங்கெடுக்க வேண்டும். அப்படி பங்கெடுத்தால்தான் இந்த அரசாங்கத்தை தோற்கடிக்கலாம்.சிங்கள மக்களோடு இணையாமல் இப்பொழுது தென்னிலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்பதே கடந்த கால வரலாறு” என்று.


அதில் உண்மை உண்டு.இலங்கைத் தீவு பிரித்தானியரிடம் இருந்து விடுபட்டதிலிருந்து இன்றுவரையிலுமான தேர்தல் களத்தை பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும்.எந்த ஒரு கட்சியாவது பெரும் பலத்தோடு ஆட்சிக்கு வரும் பொழுது அதனை வீழ்த்துவதற்கு எதிர்கட்சிகள் அணி சேர்க்கின்றன. இந்த அணிச்சேர்க்கைகளில் தர்மம் இல்லாமல் இருக்கலாம். இந்த அணி சேர்க்கைகளில் இனவாதமும் இருக்கும். ஆனாலும் இவ்வாறான கூட்டு முன்னணிகள் மூலம்தான் மிகப் பலம் பொருந்திய ஓர் அரசாங்கம் எப்பொழுதும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிச் சேர்க்கை என்பது இலங்கை அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக காணப்படும் ஒரு போக்கு.
வெல்லக் கடினமான பெரும்பான்மையோடு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வரும்போது அதை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டுக்குப் போகும். அப்படித்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெல்லக்கடினமான ஒரு பெரும்பான்மையைப் பெறும் பொழுது ஐக்கிய தேசிய கட்சி தமிழ் முஸ்லிம் தரப்புக்களோடு இணைந்து அதை எதிர்கொள்ளும். கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது அதுதான் நடந்தது. இந்த வரலாற்றுப் போக்கின் அடிப்படையில் சிந்திப்பவர்கள் இப்பொழுது தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் கசப்பு வெறுப்பு ஏமாற்றம் போன்றவற்றை அரசாங்கத்துக்கு எதிரான ஒரு திரட்சியாக மாற்றுவதற்கு மறுபடியும் தமிழ் முஸ்லிம் மக்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டுத் தேவை என்று உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள்.


ஆனால் இங்கு இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும். முதலாவது, அத்தகைய ஒரு கூட்டின் மூலம் இப்போதுள்ள அரசாங்கத்தை மாற்றலாமா? என்பது.இரண்டாவது எப்படிப்பட்ட ஒரு மாற்றம் தமிழ் மக்களுக்கு தேவை ?என்பது.


முதலாவதாக ஒரு ஆட்சிமாற்றத்துக்கான வாய்ப்புக்களைப் பார்க்கலாம். 2015ஆம் ஆண்டு அப்படி ஒரு கூட்டை உருவாக்கி தமது ஆட்சி கவிழ்க்கப்பட்ட அனுபவத்தை வைத்துத்தான் ராஜபக்சக்கள் தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற ஒரு முடிவுக்கு போனார்கள். மிகக் குறிப்பாக 2018 ஆட்சி குழப்பத்தின் போதும் மஹிந்த ராஜபக்ச நினைத்தபடி காய்களை நகர்த்த முடியாமல் போனது.அதற்கு காரணம் தமிழ் சிங்கள பிரதிநிதிகள் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதுதான். அதை இன்னும் கூர்மையாக சொன்னால் கொழும்பை யார் ஆள்வது என்பதனை தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் தீர்மானித்தார்கள்.


அதை வைத்துதான் ராஜபக்சக்கள் ஒரு முடிவை எடுத்தார்கள். இனிமேலும் அவ்வாறு சிறிய மக்கள் கூட்டங்கள் கொழும்பை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் ஒரு நிலைமை வரக்கூடாது என்று.ஈஸ்டர் குண்டுவெடிப்பு அவர்களுடைய வழிகளை இலகுவாக்கிக் கொடுத்தது.முடிவில் மூன்றில் இரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையைப் பெற்று அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.
இப்பொழுது அந்தப் பெரும்பான்மை அதன் மினுக்கத்தை இழக்கத் தொடங்கியிருப்பதாகக் கருதப்படும் ஒரு பின்னணியில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் சக்திகள் புதிய கூட்டணிகளைப் பற்றிச் சிந்திப்பதாக தெரிகிறது.அதற்குரிய நகர்வுகளிலும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் எந்த அடிப்படையில் ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கேட்கிறார்களோ அந்த அடிப்படை இப்பொழுதும் பலமாக உண்டு என்பதுதான். கொழும்பை யார் ஆள்வது என்பதை தமிழர்களும் முஸ்லிம்களும் தீர்மானிக்கக்கூடாது என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். அந்த அடிப்படையில்தான் தனிச்சிங்கள வாக்குகளை கேட்டுப் பெற்றார்கள். அவ்வாறு தனிச் சிங்கள வாக்குகளை கேட்பது என்பது பிரயோகத்தில் தமிழ் சிங்கள மக்களுக்கு எதிரானதுதான். எனவே தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிரான உணர்வுகளை தொடர்ந்தும் தக்கவைப்பதன் மூலம் அவர்கள் இப்பொழுது ஆட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும் எளிதாகக் கடந்து போகலாம்.


அதற்குரிய மிக வாய்ப்பான ஒரு சந்தர்ப்பத்தை வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் உருவாக்கப்படவிருக்கும் ஒரு பொறிமுறை அவர்களுக்கு வழங்கும். கடந்த ஜெனிவா தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்படவிருக்கும் இப்பொறிமுறையானது இலங்கை தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் ஆதாரங்களையும் திரட்டுவதற்கானது.அப்பொறிமுறை வரும் செப்டம்பர் மாதம் செயற்படத் தொடங்கும்.வரும் செப்டம்பர் மாதம் ஐநாவின் நிதி ஆண்டு தொடங்கும். அப்பொழுது தான் அப்பொறிமுறைக்குத் தேவையான நிதி வழங்கப்படும். அவ்வாறான ஒரு பொறிமுறை செயற்படத் தொடங்கும் பொழுது அது கொழும்பில் அதிகரித்த அளவில் பதட்டத்தையும் கொந்தளிப்பையும் ஒரு இன அலையையும் உற்பத்தி செய்யப் போதுமாக இருக்கும். அந்த இன அலையை வைத்து அரசாங்கம் இப்போது ஏற்பட்டிருக்கும் எல்லா குழப்பங்களையும் வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார எதிர்விளைவுகளையும் இலகுவாகக் கடந்து போகக் கூடியதாக இருக்குமா?இது முதலாவது
இரண்டாவது தென்னிலங்கையில் அரசுக்கு வழங்கப்பட்ட தனிச்சிங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதன் பளபளப்பை இழக்கத் தொடங்குவதை வைத்து சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை இணைத்து ஒரு புதிய கூட்டை உருவாக்கி ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று சிந்திப்பவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு தேவையாக இருப்பது ஆட்சி மாற்றம் அல்ல.அரசுக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம்தான். ஒடுக்கும் மனோநிலையில் ஏற்பட வேண்டிய மாற்றம்தான். இலங்கைத்தீவின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு எனப்படுவது சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் ஒடுக்கும் மனோநிலையின் விளைவுதான். எனவே அந்த மனோநிலையில் மாற்றம் வேண்டும்.அந்த மனோநிலையின் உபகரணம் ஆகிய அரசுக் கட்டமைப்பில் மாற்றம் வேண்டும்.பல்லினத்தன்மை மிக்க பல்சமயப்பண்புமிக்க ஒரு இலங்கைதீவை கட்டியெழுப்ப தயாரற்ற எந்த ஒரு மாற்றமும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஏமாற்றமாகவே முடியும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More