Home இலங்கை மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – மண்சரிவு – 20 பேர் இடம்பெயர்வு

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – மண்சரிவு – 20 பேர் இடம்பெயர்வு

by admin

(க.கிஷாந்தன்)

 

மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்துவருகிறது. நேற்று  இரவுமுதல்  நுவரெலியா  மாவட்டத்தில்  பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன.

நீரேந்தும்  பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன. இதனால் மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை  நீர்த்தேக்கத்தின் மூன்று  வான்கதவுகளும், கெனியோன் நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகளும் இன்று (12) காலை திறக்கப்பட்டன.

காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் இன்று காலை 70 மில்லிமீற்றர் இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளன. இதனால்  காசல்ரீ  நீர்த்தேக்கத்தின்  நீர் மட்டம்  உயர்ந்து வான்  பாயும்  அளவினை  எட்டியுள்ளன.

இதே வேளை நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன. எனவே  நீர்த்தேக்கத்திற்கு  கீழ்  தாழ்நிலப்பகுதியில்  வாழும்  மக்கள்  மிகவும்  அவதானமாக  இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கங்கள் தற்போது நிறைந்த காணப்படுவதனால் உச்ச அளவில் மின் உற்பத்தி நடைபெறுவதாக மின்சாரசபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதேவேளை திம்புள்ள பத்தனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டம் 2ம் இலக்கம் மத்திய பிரிவில் மண்சரிவு காரணமாக 3 வீடுகளின் சமயலறைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மவுண்ட்வேர்ணன் தோட்ட இரண்டாம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் சமயலறைப்பகுதியில் 12.08.2021 அன்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவினால் மூன்று வீடுகளின் சமயலறைப்பகுதிகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையென பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

அத்தோடு, மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக மேலும் மூன்று வீடுகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 6 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் தற்காலிகமாக மவுண்ட்வேர்ணன் தோட்ட அம்மன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More