Home இலங்கை கர்ப்பிணி தாய்மார்கள் பயமின்றி தடுப்பூசி போடலாம்

கர்ப்பிணி தாய்மார்கள் பயமின்றி தடுப்பூசி போடலாம்

by admin

தடுப்பூசியை போட்டு விட்டோம் என்பதற்காக எந்த வகையிலும் கர்ப்பிணிகள் தமது கர்ப்பத்திற்கு தீங்கு செய்யக்கூடாதென  மகப்பேற்று, பெண்ணியல் வைத்திய நிபுணர் அ.சிறிதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினுடைய ஏற்பாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை  நடைபெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏழு கர்ப்பிணிப் பெண்கள் இறந்திருக்கின்றனர். இரண்டு மாதங்களுக்குள் இது மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.
இதுவே இந்த கொரோனா தொற்று தாக்கத்தின் கடுமையை உணர்த்தும்.


கர்ப்பிணி பெண்களுக்கான தொற்று நோய் தாக்கம் என்பது மற்றவர்களை விட கூடுதலானது. உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மிகக் கடுமையான நோய் வருதல்,  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படல், செயற்கை சுவாசம் அளிப்பது, மரண வீதம் என்பன  மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கின்றது .

தடுப்பூசிகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு  போடுவது பாதுகாப்பானதே.இந்த தடுப்பூசி உயிரிழப்பையும் தீவிர தொற்று நிலைமையையும் தடுக்கும். தடுப்பூசிகளால்   குறுகிய கால பாதிப்புகள் இதுவரை பதிவாகவில்லை. நீண்ட கால பாதிப்பு தொடர்பில் எதுவித சான்றும் இல்லை . அதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


தடுப்பூசி போட்ட பின்னர் கர்ப்பிணிப் பெண்களுக்கு மற்றவர்களுக்கு ஏற்படுவது போல உடல் நோ ஏற்படலாம். அதற்கான வைத்திய ஆலோசனைகளை பெறமுடியும். தற்போதைய நிலையின் படி இலங்கையிலுள்ள சகல கர்ப்பிணிப் பெண்களும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும். கர்ப்ப காலத்தில் எந்த மாதத்திலும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும்  இலங்கையில் இதுவரைக்கும் சினோபாம் தடுப்பூசியை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .
இனி கர்ப்பிணிப் பெண்களுக்கு பைசர் ,மொடோனா, ஜோன்சன் அன் ஜான்சன் தடுப்பூசிகளும் வழங்கப்படலாம்.


கர்ப்பிணியாவதற்கு முதலோ  அல்லது கர்ப்பிணியானதை தெரியாமலோ முதல் டோஸாக அஸ்ரா செனகாவை எடுத்தவர்கள்  இரண்டாவது டோஸாக அஸ்ரா செனகாவையே எடுக்க முடியும். 
இரத்தம் உறைதலை ஏற்படுத்தலாம் என்கிற சந்தேகம் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு இனிமேல் முதலாவது டோஸாக அஷ்ரா செனகா தடுப்பூசி வழங்கப்படாது.


பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி வழங்க முடியும். தடுப்பூசி போட்டதற்காக பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதை நிறுத்த தேவையில்லை. திருமணம் செய்ய இருப்பவர்கள் அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும் . இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல் படி எந்த ஒரு தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

இலங்கையில் கருத்தடை செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நாங்கள் தவறாக தடுப்பூசியை போட்டு விட்டோம் என்பதற்காக எந்த வகையிலும் கர்ப்பத்திற்கு தீங்கு செய்யக்கூடாது.
கர்ப்பிணிப்பெண்கள் தடுப்பூசியைப் பெற்றாலும் ஏனையவர்களைப் போல சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும்.


கர்ப்ப காலங்களில் சத்தி எடுத்தல், உடம்பு நோ,கால் நோ ,மூச்சுவிட சிரமம் போன்றவை உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் விடயங்கள்.  ஆனால் கொரோனா அறிகுறிகளையும் இதனையும் ஒன்றாக நினைத்து  வைத்திய ஆலோசனையைப் பெறாமல் இருக்க சிலர் நினைக்கிறார்கள்.ஆகவே உங்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் நீங்கள் வைத்தியசாலை நாடுவது சிறந்தது.
கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் உணவு முறைகள் தொடர்பாக தவறான கருத்துகள் இருக்கின்றது. உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளும் சாப்பாடு எதையும் சாப்பிட முடியும் .போதுமான அளவு தண்ணீர் பழங்களை உண்பது சிறப்பானது.


இயலுமான அளவு தற்போதைய காலத்தில் வைத்தியசாலைக்கு அதிகமானவர்கள் கர்ப்பிணிகளுடன் வருவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. அத்துடன் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் வைத்தியசாலைக்கு வரும் போது குழந்தை பிள்ளைகளை அழைத்து வருவதை தவிருங்கள் என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More