Home இலங்கை யாழில் . இரண்டாம் அலகு தடுப்பூசிகள் நாளை முதல் வழங்கப்படும்

யாழில் . இரண்டாம் அலகு தடுப்பூசிகள் நாளை முதல் வழங்கப்படும்

by admin

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசியின் முதலாவது அலகைப் பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது அலகை வழங்கும் பணி நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், மருத்துவர் க. நந்தகுமாரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வடமாகாணத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3ஆம் கட்டத்தின் முதலாவது தடவை தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த கடந்த ஜூலை மாத இறுதி முதல் நடைபெற்று வந்தன.

அவ்வாறு தமது முதலாவது அலகு தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான இரண்டாவது அலகு தடுப்பூசிகள் நாளை ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி முதல் வழங்கப்பட உள்ளன.

18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்பு வழங்கப்பட்டதன் படியே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தினத்தில் இத்தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசி ஏற்றப்படும் தினம் பற்றிய விவரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரிகள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறியத்தரப்படும்.

தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும். பொதுமக்கள் இரண்டாவது அலகு தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கு செல்லும்போது முதல் அலகு தடுப்பூசி பெற்றுக் கொண்டமையினை உறுதிப்படுத்துவதற்காக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினால் வழங்கப்பட்ட அட்டையினை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு அழைத்து வர முடியாத நிலையில் படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு முதல் தடவை வழங்கப்பட்டதைப் போன்றே அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கான தடுப்பூசியானது தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் இறுதி நாள்களில் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும், மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை போன்ற ஆதார மருத்துவமனைகளில் முதல் தடவை வழங்கப்பட்டதனை போன்றே செப்ரெம்பர் மாதம் 4 ஆம் திகதி, 11 ஆம் திகதி சனிக்கிழமைகளில் இரண்டாவது அலகு தடுப்பூசிகளினை பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்குவதற்காக பிரத்தியேகமாக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More