Home இலங்கை வசந்த கரன்னா கொடவுக்கு எதிரான மனு விசாரணை இன்றி தள்ளுபடி!

வசந்த கரன்னா கொடவுக்கு எதிரான மனு விசாரணை இன்றி தள்ளுபடி!

by admin

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அதிகுற்றப் பத்திரத்தை வாபஸ் பெறுவதாக சட்டமா அதிபர் அறிவித்தமையை சவாாலுக்கு உட்படுத்தி, இளைஞர்களின் பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணை செய்யாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (10.11.21) தள்ளுபடி செய்தது.

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக, நீதிபதிகள் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகுற்றப் பத்திரத்தை வாபஸ் பெறுவதாக சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு ஒக்டோபர் 13ஆம் திகதியன்று அறிவித்திருந்தார்.

அதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா மற்றும் நீதியரசர் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று (10.11.21) எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, ஒருவருக்கு எதிராக அதிகுற்றப் பத்திரம் தாக்கல் செய்யவோ அல்லது செய்யாமல் விடவோ சட்டமா அதிபருக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதில் நீதிமன்றம் தலையிடாது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா அறிவித்தார்.

மேலும், மனுவை விசாரிப்பதற்குப் போதுமான வழக்குக் காரணம் மனுதார்களால் குறிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான அதிகுற்றப்பத்திரத்தைத் தொடராதமைக்கான காரணங்கள் உட்பட, சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு இரகசிய அறிக்கைகளை பரிசீலித்த நீதிமன்றம், அவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்றும் மனுவை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பளித்தது.

ராஜீவ் நாகநாதன், விஸ்வநாதன் பிரதீப், மொஹமட் திலான், மொஹமட் சஜித் உள்ளிட்ட 5 பேர், 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் காணாமல் போயுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான அதிகுற்றப் பத்திரத்தை வாபஸ் பெறுவதற்கான தீர்மானம் நியாயமற்றது, பாரபட்சமானது, சட்டவிரோதமானது, சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் தேவையற்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இயற்கை நீதி விதிகளுக்கு எதிரான அரசியல் உள்நோக்கம் கொண்டது என மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மற்றுமொரு குற்றச் செயல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மேற்கண்ட காணாமல் போனவர்களுக்கும் முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட சில கடற்படையினருக்கும் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக மனுதாரர்கள் தமது மனுவில் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More