Home உலகம் பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

by admin

பிரான்ஸில் 1980 களில் அறிவியல் புனைகதைத் தொடர் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த தொலைக்காட்சி நட்சத்திரங்களான இரட்டைச் சகோதரர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் கிலக்காகி அடுத்தடுத்து உயிரிழந்திருக்கின்றனர்.

போக்டனோஃப் (Bogdanoff) சகோதரர்கள் என அழைக்கப்பட்ட இகோர்(Igor) மற்றும் கிறிச்க்கா (Grichka) இருவரும் ரஷ்யாவை பூர்வீகமாகக்கொண்டவர்கள். பிரான்ஸில்1949 இல் பிறந்தவர்கள். 72 வயதான இருவரும் வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத நிலையில் பாரிஸ் பொம்பிடு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில் சேர்க்கப்பட்டு ஆறு நாள்கள் இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்படுகிறது.

சகோதரர்கள் இருவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி எதனையும் ஏற்றிக்கொள்ளவில்லை என்பதை அவர்கள் தரப்பு வழக்கறிஞர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த டிசெம்பர் மாத நடுப்பகுதியில் இருந்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தனர்

பிரான்ஸில் முதலாவது தொலைக்காட்சி புனைகதை நிகழ்ச்சியைத்(science fiction show) தயாரித்துத் தாங்கள் இருவருமே அதனை நேரடியாகத் தோன்றித் தொகுத்துவழங்கி வந்த போக்டனோஃப் இரட்டையர்கள், அந்நாட்களில் அதன் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற அறிவியல் சகோதரர்களாக விளங்கினர்.

1979 முதல் தொடர்ந்து 8ஆண்டுகள்”Temps X” என்ற பெயரில் அந்த நிகழ்ச்சி TF1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிப் புகழ் பெற்றது அதன் பிறகு இருவரும் அறிவியல்புனை கதை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நாசா வரை கவனத்தை ஈர்த்த அவர்களது அறிவியல் புனைவுகள் விஞ்ஞான உலகில் ஒரு தரப்பாரால் புகழப்பட்ட அதே வேளை மறுதரப்பில் மிகவும் தரக்குறைவானவை என்று கூறி விமர்சித்து ஒதுக்கப்பட்டு வந்தன.

முனைவர் பட்டத்துக்காக இருவரும் சமர்ப்பித்த விண்வெளி அறிவியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரையைப் பிரான்ஸின் விண்ணியல் ஆய்வு நிலையமாகிய CNRS”குறைவான அறிவியல் பெறுமானம் கொண்டவை”என்று கூறி நிராகரித்திருந்தது.

தங்களை “வேற்றுக்கிரக வாசிகள்” எனக்கூறிக் கொண்ட இந்த இரட்டையர்கள் முகத்தோற்றங்களை மாற்றிக்கொள்வதற்காகப் பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்சைகளைச் செய்து அபூர்வமாகத் தோன்றினர். கன்னங்கள், நாடிப் பகுதிகளில் செய்யப்பட்ட விகாரமான பிளாஸ்ரிக் சிகிச்சைகளால் ரசிகர்கள் மத்தியில் கேலிக்கு உள்ளாகினர்.

இருவரும் உள் நாட்டிலும் உலகெங்கிலும் பரவலாக அறியப்பட்டமைக்கு முகங்களை மாற்றிக் கொள்வதற்காக அந் நாட்களில் செய்யப் பட்ட அறுவைச் சிகிச்சைகளும் காரணமாகின.அறிவியல் வளர்ச்சிகளால் மனிதனின்ஆயுள் காலத்தை அதிகரிக்க முடியும் எனக் கூறிவந்தவர்கள் அறிவியல் உலகம் கண்டுபிடித்த ஆயுதமாகிய கொரோனாத் தடுப்பூசியை ஏன் எற்றிக் கொள்ளவில்லை என்ற கேள்விகள் அவர்களது மரணத்தின் பின்னர் எழுப்பப்பட்டு வருகின்றன.

இருவரும் தடுப்பூசிக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதை அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். நீண்டகால நண்பரான முன்னாள்அமைச்சர் ஒருவர்,”தடுப்பூசி , வைரஸை விடவும் உடலுக்கு ஆபத்தானது என்றுஇரட்டையர்கள் நம்பினர்” என்று கூறியிருக்கிறார்.

உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியே வைரஸை எதிர்க்கப் போதுமானது என்று அவர்கள் கூறிவந்துள்ளனர். பிரான்ஸில் பெரும் தொற்றுப் பரவல்காலத்தில் நிகழ்ந்துள்ள இவர்களது மரணங்கள் தடுப்பூசியின் முக்கியத்துவத்தின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளன.

———————————————————————

குமாரதாஸன். பாரிஸ்.04-01-2022

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More