Home இலங்கை தமிழக மீனவர்களின் படகு மூழ்கடிப்பு ? – காரைநகரில் நாளை போராட்டம்

தமிழக மீனவர்களின் படகு மூழ்கடிப்பு ? – காரைநகரில் நாளை போராட்டம்

by admin

இலங்கை கடற்படையின், வேக படகு மோதியதில், தமது படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாகவும் , படகில் இருந்த 7 மீனவர்களும், கடலில் மூழ்கிய நிலையில் சக மீனவர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளதாகவும் தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் தமிழக மீனவர்கள் தெரிவிக்கையில், 


இராமேஸ்வரம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்றைய தினம் புதன் கிழமை புறப்பட்ட மீனவர்கள், கச்ச தீவுக்கு அருகில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த வேளை , இலங்கை கடற்படையினர் தமது வேக படகில் வந்து மீனவர்களை துரத்தினர். அதன் போது , தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த வஸ்தியான் என்பவருக்கு சொந்தமான படகுடன் கடற்படையினரின் படகு மோதியதில் படகு கடலில் மூழ்கியது. 

அதன் போது குறித்த படகில் இருந்த  ஜெயபாலன், சுரேந்திரன், ஆகாஸ், டைட்டஸ், சேதுராமன், டேனியல், புதில் மென் ஆகிய 7 மீனவர்களும் கடலில் மூழ்கிய நிலையில் , சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரை சேர்ந்துள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். 


இதேவேளை , இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபடும் , தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு வடக்கு மீனவ சங்கங்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வருவதுடன் , போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். 

அந்தவகையில் காரைநகரில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி மீனவ சங்கங்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


அதேவேளை கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் 45 நாட்களுக்கு மேலாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More