Home இலங்கை மயிலிட்டித் துறைமுகத்தின் வரலாற்றுப் பெருமை மீட்டெடுக்கப்படும்!

மயிலிட்டித் துறைமுகத்தின் வரலாற்றுப் பெருமை மீட்டெடுக்கப்படும்!

by admin

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவமிக்கதாகவும் வடபகுதி கடற்றொழிலாளர்களின் பொருளாதாமிக்கதாவும் விளங்கிய மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(17.02.2022) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து புனரமைப்பு பணிகளை அங்குரார்ப்பனம் செய்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

“இலங்கையின் முதன்மையான துறைமுகமான இந்த துறைமுகம் இலங்கையின் மின்பிடித் உற்பத்தியில்  மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி செய்துவந்தது. ஆனாலும் கடந்தகாலத்தில் நாட்டில் நடைபெற்ற வன்முறை, அழிவு யுத்தம் காரணமாக துரதிஸ்டவசமாக அதில் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிட்டது. ஆனாலும் அந்த பாதிப்பிலிருந்து இந்த துறைமுகத்தை தூக்கி நிறுத்தும் முகமாகவே அதன் அபிவிருத்திக்கான இரண்டாம் கட்டட பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

 இதற்காக மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கும் எம்மை வழிநடத்திக்கொண்டிருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் விசேடமாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எமது மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் இந்த மயிலிட்டி துறைமுதுகத்தை மட்டுமல்லாது வடக்கில்  பருத்தித்துறை துறைமுகம், மன்னார் பேசலை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் துறைமுகம் ஆகிய மூன்று துறைமுகங்களையும் அமைப்பது தொடர்பிலும் முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கடந்த காலத்தில் பருத்தித்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டும் இருந்தன. ஆனாலும் அம்முயற்சி சரியாக கையாளப்படாமையால் தவறவிடப்பட்டிருந்தது.

ஆனால் நாம் ஆட்சி பொறுப்பை ஏற்றதபின் அந்த துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பான முயற்சியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றோம். அது விரைவில் கைகூடும் எனவும் நம்புகிறேன்.

துறைமுகத்தை கட்டும்போது அப்பிரதேசத்தின் கடற்றொழில் அமைப்புக்களுடன் கலந்துரையாடித்தான் அமைப்பது வழமை. அதேபோன்றே இங்குள்ள கடற்றொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடி முதலாவது கட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 ஆனாலும் அதில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் தற்போது எமது அரசாங்கத்தால் அதன் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கடந்த காலத்தில் விடப்பட்ட அனைத்து குறைபாடுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு நவீனத்தவத்துடன் கூடியதாக நிர்மானிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.

இதேவேளை எமது கடற்றொழிலாளர்கள் பலவகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கடந்த காலத்தில் நாட்டில் நடைபெற்ற  வன்முறை காரணமாக பலமான பொருளாதார கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாது கடந்தகால தமிழ். தலைவர்கள் என கூறப்பட்டவர்களால் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தாது தவறவிட்டப்பட்டதால் அதிக துன்பங்களையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள்.
அந்தவகையில் அவற்றை தீர்க்க முகமாகவே எமது நிகழ்கால எதிர்கால செயற்பாடுகள் அமையும்” என்றும் தெரிவித்தார்.

மேலும் மயிலிட்டி பிரதேசத்தில் தற்போது 60 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சுமார் 100 முதல் 125 ஏக்கர் காணிகளை  கட்டம் கட்டமாக விடுவிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்ததுடன்,  கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தரப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சுமார் 304 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த அபிவிருத்திப் பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு, கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த சந்திரசோம தலைமையில் நடைபெற்றதுடன் நாடாளுமன்ற உறப்பினர் அங்கயன் இராமநாதன், இந்திய தூதரக பிரதி தூதர் ராஜேஸ் நடராஜ், கடற்படையின் வடக்கு பிரதானி, மாவட்ட செயலாளர் மகேசன் மற்றும் துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More