Home இலங்கை மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மீதும் , அவரது குடும்பத்தினர் மீதும் காவல்துறையினா் தாக்குதல்!

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மீதும் , அவரது குடும்பத்தினர் மீதும் காவல்துறையினா் தாக்குதல்!

by admin

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையும் அவருடைய சகோதரி ஒருவரையும் காவல்துறையினா் தாக்கியதில் காயாமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


அதேவேளை குறித்த பிரதேச சபை உறுப்பினரின் தாய் , தந்தை மற்றுமொறு சகோதரி ஆகியோரை கைது செய்தகாவல்துறையினா் மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தியதை அடுத்து நீதவான் அவர்களை ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் விடுவித்துள்ளார்.  நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 


உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல். 

மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் உறுப்பினரான பண்டத்தரிப்பை சேர்ந்த அ.ஜோன் ஜிப்பிரிக்கோவின் வீட்டினுள் கடந்த வியாழக்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளை  மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர் , ஆளும் கட்சியை சேர்ந்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை கூறி , அவரின் ஆதரவாளர் தான் என கூறி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் போது , பிரதேச சபை உறுப்பினரின் தந்தையார் அதனை தடுக்க முற்பட்ட வேளை அவரை தள்ளி விழுத்திய பின்னர் வீட்டின் கேற்றை சேதப்படுத்தியதுடன் , வேலி தகரங்களையும் சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினரால் அன்றைய தினமே இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது . 

பரஸ்பர முறைப்பாடு. 

இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீதும் தந்தையார் மீதும் தாக்குதல் நடாத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் , தன்னை பிரதேச சபை உறுப்பினரின் குடும்பத்தினர் தாக்கியதாக இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் முறைப்பாட்டின் பிரகாரம் , பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை காவல்துறையினா் விசாரணைக்கு அழைத்து தாக்கியதில் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரி ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


அதேவேளை , தாம் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து , பிரதேச சபை உறுப்பினரின் குடும்பத்தினரை வாக்கு மூலம் பெறுவதற்காகவே அழைத்ததாக காவல்துறை தரப்பினர் தெரிவித்தனர்


பிரதேச சபை உறுப்பினரின் குடும்பம் பிணையில் விடுவிப்பு


பிரதேச சபை உறுப்பினரின் குடும்பத்தினரின் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்ட பின்னர் காவல்துறையினா் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர். வழக்கினை விசாரணை செய்த நீதவான் பிரதேச சபை உறுப்பினரின் குடும்பத்தினர் மூவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் விடுவித்தார். 


மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை. 


இதேவேளை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் குடும்பத்தினர் மீது இளவாலை காவல்துறையினா் தாக்குதல் மேற்கொண்டார்கள் என மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் த. கனகராஜிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை இணைப்பாளர் ஆரம்பித்துள்ளார். 


அத்துடன் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல் நிலையத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் நேரில் சென்று காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளனர். 


காவல்துறை உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பம் 
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்துறையினா் மேற்கொண்டு வரும் நிலையில் , காவல் நிலையத்தில் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை உயர் மட்ட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை த்தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More