Home இலங்கை பொருளாதார நெருக்கடி- அதிபர்கள், ஆசிரியர்கள் பணிப் புறக்கணிப்பு!

பொருளாதார நெருக்கடி- அதிபர்கள், ஆசிரியர்கள் பணிப் புறக்கணிப்பு!

by admin

இலங்கையில் நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி, அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், இன்று (25.04.22) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கம், ஒன்றிணைந்த அதிபர்கள் சங்கம், ஆசிரிய ஆலோசகர்கள் சங்கம் உட்பட பல ஆசிரியர் சங்கங்கள் இணைந்து விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த போராட்டதம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் வரவு குறைவாக இருந்த காரணத்தினால் மாணவர்கள் திரும்பிச் சென்றதையும் காணமுடிந்ததுடன் சில பாடசாலைகளில் உயர்தரப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதையும் காணமுடிந்தது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல்வேறு விதமான போராட்டங்களில் மக்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இந்த அரசாங்கம் மக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்த்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகயீன தந்திகளை அனுப்பிய பாடசாலை ஆசிரியர்கள்!

இலங்கையின் ஆசிரியர்கள், இன்று (25.04.22) திங்கட்கிழமைஅரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள சுகயீன போராட்டத்திற்கு மலையக ஆசிரியர்களும் இணைந்துக் கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நாட்டில் காணப்படும் எரிப்பொருள் பிரச்சினைக் காரணமாக ஆசிரியர்கள் தொழிலுக்கு செல்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். மேலும் அத்தியவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பல மணி நேரம் ஆசிரியர்கள் வரிசையில் நின்று அந்த பொருட்களை பெற்றுக் கொள்வதினால் குறித்த நாட்களில் குறித்த நேரத்திற்கு பாடசாலைக்கு கடமைக்கு சமூகமளிக்க முடியாமைக் காரணமாக பல்வேறு மன வேதனைக்கு ஆசிரியர்கள் உட்பட்டுள்ளனர்.

எனவே, நாட்டின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் ஆசிரியர்களான தம்மை சிறந்த மன நிலையுடன் கடமையாற்ற அரசு வழி செய்ய வேண்டும் என்று கோரியே இந்த ஒரு நாள் சுகயீன போராட்டத்தை இன்று ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இன்று மலையக பாடசாலைகள் மூடிய நிலையில் காணப்பட்டதுடன், ஆசிரியர்கள் அஞ்சல் அலுவலகங்களில் சுகயீன தந்திகளை பாடசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

அதிபர், ஆசிரியர்களின் இந்த சுகயீன போராட்டம் தொடர்பான தகவல்களை அறியாத ஒரு சில மாணவர்கள் பாடசாலைக்கு சென்று திரும்பி சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

இன்றைய இந்த போராட்டத்திற்கு அதிபர், ஆசிரியர்கள் 100வீத ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக ஆசிரிய தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More