Home இலங்கை இராணுவம் களம் இறக்கப்படுவதை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கிறது

இராணுவம் களம் இறக்கப்படுவதை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கிறது

by admin
படம் :ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் நெட் பிரைஸ்.

இலங்கை அரசியல் பிரமுகர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எவரும் இந்தியாவுக்கு வெளியேறவில்லை. அதுதொடர்பாகச் சில செய்தி நிறுவனங்கள் சமூகவலைத் தளங்களில் பரப்பப்படுகின்ற தகவல்கள் உண்மைக்குப் புறம்பான போலிச் செய்திகள் என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் அதன் ருவீற்றர் பதிவில் தெரிவித்துள்ளது.

இலங்கை அரச பிரமுகர்கள் எதிர்ப்புக்கு அஞ்சி இந்தியாவுக்கு வருவது அங்கும் அமைதி இன்மையையும் ஆர்ப்பாட்டங்களையும் பரவச்செய்து விடலாம் என்று இந்திய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இதேவேளை, பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, இலங்கையைப் பெயர் குறிப்பிடாமல் இந்தியா தனது படைகளைக் கலவரப் பகுதிக்குஅனுப்ப வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.

“இந்திய எதிர்ப்பு வெளிநாட்டுச் சக்திகள் மக்களின் கோபத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. எனவே இந்தியா அரசமைப்பின் ஆட்சியை உறுதி செய்வதற்காகத்தனது படைகளை அனுப்பவேண்டும்”-இவ்வாறு சுப்ரமணியன் சாமி தனதுபதிவில் எழுதியுள்ளார்.

அவரது இந்தக்கருத்து சமூகவலைத் தளங்களில் கடும்விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.இந்திய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகிய சுவாமி, மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான கூட்டாளிஆவார்

.?அமெரிக்கா கவலை

இதேவேளை, இலங்கையில் சட்டம் ஒழுங்கு பேணும் பணிக்கு இராணுவம் ஈடுபடுத்தப்படுவது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. “அமைதி வழிகளில் எதிர்ப்பைத் தெரிவிப்போர் இராணுவத்தினால் அல்லது சிவிலியன் பிரிவின் தரப்பில் வன்முறை அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடாது என்பதை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம்,” என்று அமெரிக்க ராஜாங்க அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ்(Ned Price) தெரிவித்திருக்கிறார்.

“இன்னும் பரந்த அளவில், கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். நான் முன்பு கூறியது போல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை நாங்கள் கண்டிக்கிறோம்.

வன்முறைச் செயல்களைத் தூண்டும் மற்றும் ஈடுபடும் எவரையும் முழு விசாரணைக்குட்படுத்திக் கைது செய்து, வழக்குத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம். நான் முன்பு கூறியது போல், துருப்புக்களின் நிலைப்பாட்டை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், அது எங்களுக்குக் கவலை அளிக்கிறது,

மேலும் பிரதமர் பதவிவலகியதன் பின்னர் இலங்கையில் நிலவும் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.”-இவ்வாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

——————————————————————

-குமாரதாஸன். 11-05-2022பாரிஸ்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More