Home இலங்கை நாடாளுமன்றை கலைத்து, தேர்தலை நடத்தி, புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்!

நாடாளுமன்றை கலைத்து, தேர்தலை நடத்தி, புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்!

by admin

”தற்போதுள்ள அரசாங்கத்தை புதிய அரசாங்கம் என நான் கூறப் போவதில்லை. இது புதிய அரசாங்கம் இல்லை. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு அரசாங்கம் அமைக்கப்படவேண்டும்” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டை மோசமாக பொருளாதார நெருக்கடி தாக்கியிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதை நிகழ்த்தியவர்கள் அதற்குப் பொறுப்பானவர்கள் அரசாங்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் பதவி விலகவில்லை. ஜனாதிபதி உடனடியாக அவராகவே பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும்.

இந்த நிலைமைக்கு கோட்டாபய ராஜபக்ஷ முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

ஜனாதிபதி கோட்டாபய பொறுப்பேற்ற உடனேயே கொண்டுவந்த வரிச்சலுகைகள் தான் இந்த நிலைமை உருவாவதற்கு முக்கியமான காரணம். அவ்வாறான வரிச்சலுகையை நான் கொண்டு வருவேன் என தேர்தலுக்கு முன்னரே கோட்டாபய ராஜபகக்ஸ அறிவித்திருந்தார்.

அப்போது நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீர இவ்வாறான வரிச்சலுகை இலங்கையில் அமுல்படுத்தப்பட்டால் இலங்கை லெபனான் போலவும் வெனிசூலா போலவும் மாறும் எனக் கூறியிருந்தார். அதனை நாம் தற்போது அனுபவிக்கின்றோம்.

சுதந்திரமாக நாடாளுமன்றில் இருக்கப்போகிறோம். எதிர்தரப்பிற்கு வந்துவிட்டோம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டி விட்டு திரும்பவும் அதே நபர்கள் போய் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அதே ஆசனங்களில் அமர்ந்து இருப்பது என்பது மக்களை முட்டாள்கள் என்று நினைத்து செயற்படுகின்றனரோ என சிந்திக்க வேண்டியுள்ளது. மஹிந்த ராஜபக்சவுக்கு பதிலாக ரணில் ராஜபக்ஷவு அமர்ந்திருக்கிறார்கள்.

ராஜபகக்ஸ எங்கும் போகவில்லை. ராஜபக்ஷவின் ஆட்சியே தற்போது நடக்கிறது.இந்த நிலைமை மாறாமல் பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீளமுடியாது.

மக்களை ஏமாற்றாமல் பொறுப்பானவர்கள் பதவி விலகி அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும். ஓகஸ்ட் மாதமளவில் பாரிய பஞ்சமும் உணவுப்பற்றாக்குறையும் ஏற்படும்.

தற்போதுள்ள அரசாங்கத்தை புதிய அரசாங்கம் என நான் கூறப் போவதில்லை. இது புதிய அரசாங்கம் இல்லை. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு அரசாங்கம் அமைக்கப்படவேண்டும்.

இன்று வடபகுதியிலே மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுகிறது. இந்த நிலைமை உடனடியாக மாற்றப்பட வேண்டும். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக கிடைப்பதற்கான வழிகள் செய்யப்பட வேண்டும் என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More