Home இலங்கை கிளிநொச்சி வளாக புதிய கட்டட திறப்பும் ஆர்ப்பாட்டமும் – முரண்பாடும்!

கிளிநொச்சி வளாக புதிய கட்டட திறப்பும் ஆர்ப்பாட்டமும் – முரண்பாடும்!

by admin

தொழில்நுட்ப பீட ஆர்ப்பாட்டத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்கிறது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொழில்நுட்ப பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல் எனும் தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இன்று (18) யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தின் கட்டடத்திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த குழுவினருக்கு எதிராக அங்கு கல்வி கற்கும் குறிப்பிட்ட ஒரு சில மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் தொழில்நுட்ப பீட மாணவர் ஒன்றியத்திற்கும் எந்தவித தகவல்களும் அவ் மாணவர்களினால் தெரியப்படுத்தாத நிலையிலே இவ் ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சிலரது அரசியல் சுயலாபத்திற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டமாகவே இது காணப்படுகின்றது. நடந்த இப் போராட்டத்திற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதனை இங்கே உறுதியாகக் கூறிக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்ட மாணவர்களினால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவர்கள் முன்வைத்த கோரிக்கையானது மாணவர் ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அக்கோரிக்கையானது நியாயமானதாக இருந்தால் கண்டிப்பாக அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இவ்வாறான தவறுகள் எதிர்வரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் தீர்க்கமாக கூறிக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டடம் நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா , பீடாதிபதிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , கல்வி அமைச்சின் செயலாளர் M.N.ரணசிங்க, மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கல்வி அமைச்சர் திறப்பு விழாவுக்கு வருகை தராத நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டடத்தை திறந்து வைத்தார்.

இதனையடுத்து, கட்டட திறப்பு விழா நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி பல்கலைக்கழக வீதியிலிருந்து பேரணியாக சென்ற மாணவர்கள், நிகழ்வு நடைபெறும் தொழில்நுட்ப வளாகத்திற்குள் நுழைய முயற்சித்த போது, நுழைவாயிலிலிருந்த பாதுகாவலர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து, தொழில்நுட்ப வளாகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

பீடத்தின் செயற்பாடுகளை முழுமையாக பூர்த்தி செய்யாமல் திறந்து வைக்கப்படுவதாகவும், கல்வி செயற்பாடுகளுடன் தொடர்புடைய எவரேனும் கட்டடத்தை திறந்தால் தமக்கு பிரச்சினை இல்லை எனவும் அரசியல்வாதி ஒருவரை திறக்க வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் நிகழ்வை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேற முயற்சித்த போதிலும் மாணவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.

கல்வி அமைச்சின் செயலாளரிடம் மாணவர்கள் தமது மகஜரை கையளித்தனர்.

இதனிடையே, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாவட்ட அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இதனையடுத்து, திறப்பு விழாவில் கலந்துகொள்ளாமைக்கான காரணம் தொடர்பில் கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

தாமதமாக வருகை தந்ததாகவும் வட மாகாண அமைச்சர் ஒருவர் இருக்கும் நிலையில், தாம் திறந்து வைக்க வேண்டியதில்லை எனவும் அவர் பதிலளித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More