Home இலங்கை சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தயாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தயாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

by admin

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை முன்வைத்து குற்றப்பத்திரத்தை தயாரித்து மன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு நேற்று (29.09.22) கட்டளையிட்டுள்ளது.

சட்டத்தரணி பிரியலால் சிறிசேன மற்றும் பொலன்னறுவை சட்டத்தரணிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி விஜித குமார ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள், நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், ஒக்டோபர் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இராஜாங்க அமைச்சருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்தது.

சட்டமா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த ஆகியோர் மனுக்களில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில்,  பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய சனத் நிஷாந்த, இலங்கையின் நீதித்துறை தொடர்பாக, குறிப்பாக நீதித்துறை அதிகாரிகள் தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 105(3) சரத்தின் பிரகாரம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக சனத் நிஷாந்த எம்.பியை தண்டிக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

20222ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்தில் போராட்டக்காரர்களைத் தாக்கியமைக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சனத் நிஷாந்த சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவதற்கு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட எம்.பியை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More