Home இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம்

by admin

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நியாயமற்ற தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதற்கான எமது முடிவை வெளிப்படுத்தும் வகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாங்கள் இந்த ஊடக அறிக்கையினை வெளியிடுகின்றோம். ஏனெனில் இத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள ராணுவ வீரர்களினால்  தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும்  ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

தமிழர்களாகிய நாம் பல்லாண்டு காலமாக மிகப் பெரும் இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். இந்தத் தீர்மானமானத்தினூடாக ஆகக்குறைந்தது நீதியாவது கிடைக்கும் என்று நம்பியிருந்தோம். ஆனால் இந்தத் தீர்மானத்தால் எங்களின் நம்பிக்கை பொய்த்துப்போயுள்ளது. இந்தத் தீர்மானம், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் பற்றிய எந்த புரிதலையும் வெளிப்படுத்தவில்லை. ஆகக்குறைந்தது தமிழ் மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள், வேதனைகளை கூட பிரதிபலிக்கவில்லை.

இந்தத் தீர்மானம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வந்த சிறிலங்கா அரசாங்கங்களினால் தமிழர்கள் எதிர்கொண்ட கொடுமைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறிவிட்டது. இத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களை பொறுப்பு கூறவைப்பதற்குப் பதிலாக,  அவர்களின்  சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்பதுடன்,  அவர்களை பிணை எடுப்பதாகவே அமைத்துள்ளது.

தமது குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தேவை இல்லை, தாம் தண்டனைக்கு உட்படுத்தப்படமாட்டோம் என உணரும் தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா அரச படையினர், எதிர்காலத்திலும் தமிழர்களுக்கு எதிராக அட்டூழியங்களைத் தயக்கமின்றி மேற்கொள்வதற்கு, இத்தீர்மானம் வழி ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த, ஆயிரக்கணக்கான தமிழரை காணாமல் ஆக்கிய,  நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அதே சிறிலங்கா அரச படையினரே, அவர்களால்  பாதிக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் இன்னமும் ஆக்கிரமித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

இந்த தீர்மானம், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த பரிந்துரையை முற்றிலும் புறக்கணித்துள்ளது. இதே பரிந்துரையை அனைத்து முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்களும்,  இலங்கைக்கு வருகை தந்து அறிக்கையிட்ட ஒன்பது முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களும் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா நிபுணர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இதே பரிந்துரையை வலியுறுத்தி உள்ளனர்.

சிறிலங்காவை  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, நாம் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகம் உட்பட அனைத்து தமிழ் மக்கள் தரப்பினாலும்  வலியுறுத்தப்பட்டது. சிறிலங்காவின் அரச படையினராலும் அரசியல் தலைவர்களாலும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைகளுக்கு நீதியை பெற்றுக்கொள்ளும் ஒரே வழியாக இதனையே எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இந்தத் தீர்மானம் எங்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் முற்றிலும் புறக்கணித்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் பிப்ரவரி 2017 இல், தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” கையாளப்பட்ட இலங்கை இராணுவ “கற்பழிப்பு முகாம்கள்” பற்றிய விவரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது. மேலும், சிறிலங்கா அரச படையினரால் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள் மற்றும் பெரும் இழப்பினை சந்தித்த  தமிழ் சமூகத்தின் பல்வேறு தரப்பினாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், சமர்ப்பிக்கப்பட்ட இத்தீர்மானம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த தவறியது மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தின் பெரும் துயரத்தையும் வலிகளையும் புறக்கணித்துள்ளது. ஆகவே இந்த நியாயமற்ற தீர்மானத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் – என்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More