Home இலங்கை இறுதி மூச்சு வரை கடலட்டை பண்ணைக்கு எதிராக குரல் கொடுப்போம்

இறுதி மூச்சு வரை கடலட்டை பண்ணைக்கு எதிராக குரல் கொடுப்போம்

by admin

‘எங்களைக் கொலை செய்ய முற்பட்டாலும், எங்கள் உயிர் இருக்கும் வரை எமது கடல்பகுதியில் நெக்டா நிறுவனத்தின் அனுமதியோடு சட்டவிரோதமாக இடம்பெறும் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்’ என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அ.அன்னராசா இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

படகுப் போக்குவரத்துக்கும் கடல் நீரோட்டத்திற்கும் குடாப்பரப்புகளில் அமைக்கப்படும் கடலட்டை பண்ணைகள் எமக்கு இடையூறாக இருக்கின்றது என்பதை எம்மால் நிரூபிக்க முடியும். 

தென்னந்தோப்பில் நின்று கொண்டு கடற்றொழில் அதிகாரிகள் கூறுவதை எம்மாலே ஏற்றுக் கொள்ள முடியாது. கடலட்டை பண்ணையால் பாரம்பரிய மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக நெக்டா திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நிருபராஜ்க்கு நாம் மகஜரொன்றினை கையெழுத்திருந்தோம். 

இதுவரை அந்த மகஜருக்கு எந்தவித பதிலும் தரப்படவில்லை.இந்த நிலையில் நாம் ஊடகங்கள் வாயிலாக எமது கருத்துக்களை தெரிவிக்கின்றோம். 

நாம் ஊடகங்கள் வாயிலாக  தெரிவிக்கின்ற கருத்துக்களை வைத்து எம்மை அச்சுறுத்தலாம் என்றோ, அடக்கலாம் என்றோ அதிகாரிகள் நினைப்பார்களேயானால் கடற்றொழில் சமூகம் வெகுண்டெழும் என்பதை தெரிவிக்கின்றோம்.

கடலட்டை பண்ணை தொடர்பாக நாங்கள் கூறும் கருத்து பொய்யானால் தென்னந்தோப்புக்குள் நின்று கதைக்காமல் பகிரங்கமாக ஊடகங்களுக்கு முன் விவாதத்துக்கு வாருங்கள்.

ஜம்பது வருடங்களுக்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தில் கடலட்டை பிடித்து பதப்படுத்தி வியாபாரம் செய்த உள்ளூர் வியாபாரிகள் இருக்கின்றார்கள். 

அதனால் கடற்சூழலுக்கோ கடற்றொழிலாளர்களுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் தற்போது கடலட்டை குஞ்சுகளை பிடித்து பண்ணை அமைத்து செயற்கையாக இனப்பெருக்கக்கம் செய்யலாம் என கூறுகிறீர்கள்.

இயற்கையாக கிடைக்கும் வளத்தை அளவோடு பெறமுடியும். அளவுக்கதிகமாக ஆசைப்பட்டு இயற்கை வளத்தையும் அழிப்பதாகவே முடியும்.

அண்மையில் தீவகப் பகுதிக்கு சென்ற கடற்றொழில் அமைச்சரிடம் பருத்தித்தீவில் அமைக்கப்படும் கடலட்டை பண்ணை தொடர்பாக பொதுமக்களால் கேள்வியெழுப்பபட்டது. இதன்போது நெக்டா உதவிப்பணிப்பாளரிடம் அந்த பண்ணை தொடர்பாக ஆய்வு செய்யுமாறு கடற்றொழில் அமைச்சரால் பணிக்கப்பட்டது.

பருத்தித்தீவு கடலட்டை பண்ணை யாருக்கு சொந்தம் எனவும் தெரியவில்லை. அதற்கு சட்ட ரீதியான அனுமதியும் வழங்கப்படவில்லை. 

அதிகாரிகளுக்கு துணிவு இருந்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பருத்தித்தீவு கடலட்டைப் பண்ணையை அகற்றுங்கள். அதை விடுத்து விட்டு துறைசார்ந்த அதிகாரிகளே எங்களை அச்சுறுத்துவதற்கு முயற்சிக்காதீர்கள். 

எங்களைக் கொன்றாலும் எங்கள் உயிர் இருக்கும் வரை எமது கடல்பகுதியில் நெக்டா நிறுவனத்தின் அனுமதியோடு சட்டவிரோதமாக இடம்பெறும் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம். மிரட்டும் வரை மிரட்டுங்கள் சாவுக்கும் தயங்கமாட்டோம்.

சர்வதேச நாடுகளின் போட்டிக்கு வடக்கு கடற் பகுதி பலியாகின்றது. இந்தியாவாக இருக்கலாம் சீனாவாக இருக்கலாம் அமெரிக்காவாக இருக்கலாம் அதனை நிறுத்த வேண்டும். 

எந்த நாடுகளும் எமக்கு உதவி செய்வதாக இருந்தாலும் வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அந்த உதவியை செய்ய வேண்டும். 

நாம் வளர்ப்பு திட்டத்தை நூறு வீதம் எதிர்க்கவில்லை. உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவித்துக் கொண்டு அதனைப் பாதிக்காத வகையில் வளர்ப்புத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்துகின்றோம் என்றார்.

மீண்டும் தீவகத்திற்குள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப்படகுகள்

யாழ்ப்பாணம் தீவக பகுதிகளான நெடுந்தீவு மற்றும் அனலைதீவு பகுதிகளில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு நூற்றுக்கணக்கான இந்திய இழுவை மடிப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனால் மீன்பிடிக்க சென்ற அப்பகுதி மீனவர்கள் இந்திய இழுவை மடிப் படகுகளை கண்டதும் தொழில் ஈடுபடாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடாத்திய  ஊடக சந்திப்பிலேய இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், 

இலங்கைக் கடற்படையினர், இந்திய துணைத்தூதரகம் ஆகியோர் வடபகுதி கடலுக்குள் அத்துமீறி இந்திய இழுவைப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழில்நூட்ப முறைகள் இலங்கையின் வடபகுதியில் அமுல்

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு இலங்கையின் வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கவலையளிப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

இந்திய அரசாங்கம் சுற்றுச்சூழலை கருத்திற்கொண்டு இந்தியாவில் கடலட்டை பிடிப்பதற்கும், வளர்ப்பதற்கும் தடை விதித்துள்ளது.

ஆனால் கடந்தவாரம் மன்னார் ஒலைத்தொடுவாய் பகுதியிலுள்ள
கடலட்டை உற்பத்திக் குஞ்சு நிலையத்தில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிக்காக வருகை தந்துள்ளனர்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு இலங்கையின் வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கவலையளிக்கிறது.

 இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழில்நூட்ப முறைகளை இலங்கையின் வடபகுதியில் அமல்படுத்துவதை வடபகுதி மீனவர்கள் விரும்பவில்லை.

இந்திய அரசு மற்றும் இந்திய துணைத் தூதரகம் என்பன இதனை கருத்தில் கொண்டு கடலட்டை சார்ந்த தொழில்நுட்பங்களை அமுல்படுத்துவதை தவிர்க்க வேண்டும் . 

ஏனைய கடல்வாழ் உயிரினங்களின் வளர்ப்பு சார் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தலாம் என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More