Home இலங்கை பொங்கலுக்கு மேலும் தமிழ் கைதிகள் விடுதலை

பொங்கலுக்கு மேலும் தமிழ் கைதிகள் விடுதலை

by admin

கொழும்பில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் காவல்துறை பதிவு பத்திரங்கள் விநியோகம் நடக்கிறது என நான் ஜனாதிபதி ரணிலுக்கு கூறியதை தொடர்ந்து இதுபற்றி காவல்துறை மாஅதிபரை அழைத்து கூறுகிறேன் என ஜனாதிபதி எனக்கு பதிலளித்தார். அதேபோல், பொங்கல் பண்டிகை காலத்தில் இன்னமும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாகவும்  ஜனாதிபதி ரணில் தெரிவித்தார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் மனோ கணேசன் கூறினார்.   

ஜனாதிபதி செயலகத்தில்,  ஜனாதிபதி ரணில் தலைமையில் அரச தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்ககள் சாகல ரத்னாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் காவல்துறைப் பதிவு பற்றியும் உரையாடினோம். இப்போது சமாதான காலம் நிலவுவதால், வீடு வீடாக சென்று காவல்துறை பதிவு பத்திரங்களை விநியோகம் செய்து, விபரங்களை திரட்ட வேண்டிய அவசியம் என்ன என நான் கேட்டேன். மேலும் இப்படி திரட்டப்படும் விபரங்கள் தவறான நபர்கள் கைகளுக்கு போவதை தடுக்க முடியாது எனவும் கூறினேன்.  தற்போது யுத்தம் இல்லை என்பதால் இதற்கென்ன அவசியம் என்று அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் கருத்து கூறினார். இதனையடுத்து காவல்துறை பதிவு பற்றி ஐஜிக்கு பணிப்புரை விடுப்பதாக ஜனாதிபதி சொன்னார்.

நேற்று விடுவிக்கப்பட்டதை போல், பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாக ஐனாதிபதி மேலும் சொன்னார். அருகிலிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்கள் சாகல ரத்னாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோரும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றி சாதகமாக கருத்து பகிர்ந்தனர்.

இதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை  தீர்வு தொடர்பான பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி சொன்னார். இத்தகைய நடவடிக்கைகள், நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளாக (Confidence Building Measures) கருதப்படும் என நான்  ஜனாதிபதியிடம் கூறினேன். இவற்றை தொடர்ந்து செய்யும்படி வேண்டுகோள் விடுத்தேன்.  

அரகல கிளர்ச்சி மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு ஆகியவை தொடர்பில் கைதாகி உள்ளோர் தொடர்பில் தயக்கம் இருப்பதாக ஜனாதிபதி மற்றும் அரசு தரப்பினர் கருத்துகளில் இருந்து தெரிய வந்தது. அவர்களையும் விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையாவது இடை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், ஆனால், தமிழ் கைதிகள் விடுவிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு என நான்  ஜனாதிபதியிடம் கூறினேன். ஐந்து முதல் இருபது வருடங்கள் வரை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் பிரச்சினை விசேடமாக கருதப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.

சிங்கள மக்கள் மத்தியில், தமிழ் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் சாதகமான எண்ணப்பாடு இன்று நிலவுவதாக  பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் மனுஷ நாணயக்கார,  சாகல ரத்னாயக்க ஆகியோரும் கூறினர்.

மலையக மக்கள் மத்தியிலான, பெருந்தோட்ட பிரிவினர் பற்றி நான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார். பெருந்தோட்ட பகுதிகளிலேயே  51 விகித உணவின்மை பிரச்சினையும், இதையடுத்தே, நகரங்களில் 43 விகிதமும், கிராமங்களில் 34 விகிதமும் உணவு பாதுகாப்பின்மை இருப்பதாக ஐநா நிறுவனங்கள் கண்டறிந்து கூறி இருப்பதை நான் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க விசேட ஒதுக்கீட்டு திட்டம் ஒன்றையும், அவற்றை ஆராய ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்கவும் கோரினேன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More