Home இலங்கை பொருளியல் தாழ்வுநிலை காவு கொள்ளும் சமூகங்கள்! மருத்துவர்.சி. யமுனாநந்தா.

பொருளியல் தாழ்வுநிலை காவு கொள்ளும் சமூகங்கள்! மருத்துவர்.சி. யமுனாநந்தா.

by admin


இலங்கையின் பொருளாதார நெருக்கீடு முறையாக எதிர்கொள்ளப்படா-விடின் அடுத்துவரும் 75 வருடங்களில் இனப்பரம்பலில் மாற்றங்கள் ஏற்படும். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கையில் இருந்து பெருமளவில் மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். இதில் துறைசார் நிபுணர்கள் முதல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சாதாரண தொழிலாளிகள் வரை அதிக வருமானத்திற்காக நாட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தற்பொழுது புலம்பெயரும் மக்களை இன ரீதியாகப் பார்க்கையில் வழமையாக தமிழர்கள் புலம்பெயரும் நிலைமாறி பெருமளவான சிங்களமக்கள் புலம்பெயரும் நிலைமை தோன்றியுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்து 75 வருடங்களை அண்மிக்கும் இவ் வேளையில் கடந்தகாலங்களில் கிழக்குமாகாணம், வடமத்திய மாகாணம் என்பவற்றில் விவசாயக் குடியேற்றங்களில் குடியமர்த்தப்பட்ட மக்களும் தமது வாழ்வாதாரத்திற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே புலம்பெயர்ந்த நிலையில் அவர்களுக்கு என உறுதியான சமூகத் தொடர்புகள் உண்டு. மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்துடனான கலாசார உறவும் பலமாக உள்ளது. இதனால் தமிழர்களின் மொழி, கலாச்சாரம் புலம்பெயர் நிலையிலும் உறுதியாக உள்ளது.

மாறாகச் சிங்கள மக்கள் நாட்டை விட்டு புலம்பெயரும் நிலையில் இலங்கையில் சிங்கள மக்களது சமூக பொருண்மியமேன்மை பாதிக்கப்படும். புலம்பெயரும் சிங்கள மக்களும் இன்னும் 10 வருடங்களுக்கு மேல் வெளிநாடுகளில் கடுமையாக உழைக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்நிலையில் அவர்களது இரண்டாம் சந்ததியினர் மீளவும் இலங்கைக்கு வரவிளைய மாட்டார்கள்.

இலங்கையிலுள்ள முஸ்லீம் மக்கள் இலங்கையிலே சிறப்பாக எத்தகைய தொழிலையும் செய்து தமது வாழ்வை சிறப்பாக மேற்கொள்கின்றனர். சாதாரணமாகவே குடிப் பரம்பல் வீதத்தினை அதிகமான அதிகரிப்னைக் கொண்ட மக்கள் முஸ்லீம் மக்களேயாவர். இந்நிலையில் இன்னும் 50 வருடங்களில் முஸ்லீம்களே சனத்தொகை அதிகமுள்ள சமூகமாக மாறுவார்கள்.

தமிழ்மொழியும் தமிழ்ப் பாரம்பரியமும் வட இலங்கையும் தமிழகமும் தொடர்பில் இருப்பதனால் மாற்றமடையாது பேணப்படும். ஆனால் சிங்கள மொழியும் பௌத்த பாரம்பரியமும் அடுத்த 75 வருடங்களுக்குப் பின்னர் தென்னிலங்கையில் இல்லாது போகும் சூழலையே தற்போதைய பொருளாதார தாழ்நிலை இனம் சார் புலம்பெயர்வு ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை யாழ்ப்பாணத்தில் தேசிய விழாவாகக் கொண்டாடும் நிகழ்வானது எதிர்காலத்தில் மங்கும் தென்னிலங்கை அரசியல் தலைமைத்துவத்தினைக் கட்டியம் கூறும் நிகழ்வாகக் கருதலாம். அடுத்த 75 வருடத்தில் வட இலங்கை சேது இராஜ்ஜியத்தின் பகுதியாக பொருளாதாரத்தில் மேன்மை உறும்.

எனவே தற்போதைய பொருளாதார தாழ்வுநிலையைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு தவறிவிட்டால் சிங்கள மக்களின் எதிர்காலம் இலங்கையில் இல்லாது போகும் சிறந்த பொருளியல் நுட்பமாக சமவுடமை பொருளாதாரத்தை தற்போது அறிமுகப்படுத்தல் அவசியம். திரவப்பண ஓட்டத்தினை வங்கிகளில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும். அனைவரும் கட்டாய கடமைக்குச் செல்லல் அவசியம். வெளிநாடுகளுக்குச் செல்லல் கட்டுப்படுத்தல் அவசியம். வேதனம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படல் அவசியம். உணவுப் பொருட்கள் பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்படல் வேண்டும். விவசாயம், மீன்பிடி, சிறுகைத் தொழில்களுக்கு ஊக்குவிப்பு வழங்கப்படல் வேண்டும். இவ்வாறு திட்டமிட்டாலேயே சில வருடத்தில் பொருளாதார தாழ் நிலையிலிருந்து மீளலாம்.

மேலும் தற்போது திட்டமிடப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மக்களின் அதிக வாக்குகளைப் பெறும் அரசியல் கட்சியின் தலைவரை இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கலாம். இதனால் ஜனநாயகம், மக்களின் குரல் பிரதிபலிக்கப்படும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் சர்வாதிகார அடக்குமுறையினைக் கட்டுப்படுத்தலாம். மனித உரிமைகளைப் பேணலாம். மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்இ வன்முறைகள் இல்லாத அமைதியான அரசியலுக்கு வழி சமைக்கலாம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More