இலங்கை பிரதான செய்திகள்

அவுஸ்ரேலியாவுக்கு, சட்டவிரோத படகு பயணம் செய்ய ஆயத்தமானவர்கள் கைது!

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்து வந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று (15.03.23) இரவு மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொக்குவில் காவற்துறைப் பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவ தினமான நேற்று இரவு 7 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான காவற்துறைக் குழுவினர் சுற்றிவளைத்தனர்.

இதன் போது சட்டவிரோத ஆள் கடத்தல் மாபியாவைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 16 பேரிடம் பணத்தை வாங்கி கொண்டு மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து அவர்களை அழைத்து வந்து மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கு கடந்த ஒரு மாதகாலமாக தங்க வைத்துள்ளதாக காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் 3 சிறுவர்கள் 3 கர்ப்பிணி பெண்கள் உட்பட 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு வீடு வாடகைக்கு பெற்றுக் கொடுத்து உதவி புரிந்து வந்த ஒருவர் உட்பட 15 பேரை கைது செய்ததுடன் படகு மூலம் செல்வதற்காக கொள்வனவு செய்யப்பட்டு வைத்திருந்த சமபோசா, பிஸ்கற் பக்கற்கள் சீனி போன்ற பொருட்கள் மற்றும் ஆடைகளையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

இவர்களை இன்று (16.03.23) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குறற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.