இந்த அகதிகளை எந்த நாடு ஏற்றுக்கொள்ள சம்மதிக்கின்றதோ அந்த நாட்டுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
எவ்விதமான தவறும் புரியாத 75 இலங்கைத் தமிழர்களை மலேசியா அரசாங்கம், இலங்கைக்கு திருப்பியனுப்பக் கூடாது எனக் கேட்டுக்கொள்வதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பீ. ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மலேசிய அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது. அவர்கள் வேறு நாட்டில் அடைக்கலம் கோரும் நோக்கில் கப்பலில் சென்றனர். அவர்கள் மலேசியாவில் அடைக்கலம் தேடி வரவில்லை. எனவே கருணையோடும் மனிதாபிமானத்துடனும் அரசாங்கம் அவர்களுக்குரிய உதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் ராமசாமி கூறியுள்ளார்.
இந்த அகதிகளை எந்த நாடு ஏற்றுக்கொள்ள சம்மதிக்கின்றதோ அந்த நாட்டுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். உள்நாட்டு போரில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியான நிலையில், கப்பல் மூலம் அவுஸ்த்தேரலியாவுக்கு சென்று கொண்டிருந்த போது, தவறுதலாக மலேசிய கடல் எல்லைக்குள் நுழைந்ததால், இவர்களை மலேசிய கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் வந்த கள்ளக்குடியேறிகள் அல்லர் என்பதை உணர்ந்து அவர்களை மனிதாபிமான முறையில் அடைக்கலம் கொடுத்து, எந்த நாடு இந்த தமிழர்களை ஏற்றுக்கொள்கிறதோ அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் கடப்பாடு மலேசியாவுக்கு உண்டு.
எனவே இவர்களை அத்துமீறி மலேசியாவிற்குள் புகுந்தவர்கள் என தண்டிக்கக்கூடாது என 75 தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேனிடம் கடிதம் மூலம் கோரவுள்ளதாகவும் பீ.ராமசாமி தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள 75 இலங்கையரும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.