GTN செய்தியும் இணைக்கப்பட்டு உள்ளது
இலங்கை பாராளுமன்ற பிரதி குழுக்களின் தலைவரும EPDPயின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரகுமார் தனது செய்தி குறித்து; அனுப்பிய பதில் எந்தவித திருத்தமும் இன்றி முழுமையாக இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்:-
உண்மைக்குப் புறம்பான செய்திதொடர்பாக - அன்புள்ள 'குளோபல் தமிழ் செய்திகள்' ஆசிரியருக்கு,
வணக்கம். தங்களுடைய இணையத் தளத்தில் 'வடபிராந்திய கடற்படைத்தளபதி VS சந்திரகுமார் - மணல் அகழ்வு VS மனச்சாட்சி = மௌனம்' என்றதலைப்பில் ஒரு செய்தி 25.06.2012 அன்று பதிவேற்றப்பட்டிருந்தது.
பொதுத்தள மொன்றிற் பகிரப்படும் செய்தியில் உண்மைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது ஊடகதர்மமும் அடிப்படை ஊடகவியற் பண்புமாகும். அது ஊடகத்துறையின் அறிவுசார் விழுமியத்தை உடையதுமாகும். ஆனால், இவை அனைத்துக்கும் புறம்பான முறையில் முற்றிலும் உண்மையல்லாத – பொய்யான செய்தியை தங்களின் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியும் அதிற்கூறப்படும் சம்பவங்களும் விளக்கங்களும் உரையாடல்களும் மிகப் பகிரங்கமாக பொதுமக்கள் மத்தியிலும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மத்தியிலும் நடந்தவையாகும்.
உண்மை நிலைமை இப்படி இருக்கும்போது இவற்றுக்கு முற்றிலும் மாறாக ஒரு செய்தியைத் திரிவு படுத்தி உங்களுடைய செய்தியாளர் ஒரு செய்தியைப் புனைந்துள்ளார். இதைக் குறித்து தாங்கள் கூட பரிசீலனை செய்யவில்லை என்பதே மிகக்கவலைக்குரியதாக உள்ளது.
இதனையிட்டு ஆழ்ந்த வேதனையும் ஊடகத்துறையின் இத்தகைய நிலைகுறித்த என்னுடைய கவலைகளையும் தெரிவிக்கிறேன்.
ஆகவே இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை விளக்கி இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.
குறித்த செய்திக்கான விளக்கம் -
கடந்த 25.06.2012 அன்று காலை ஊர்காவற்றுறைப் பிரதேச சபையில் தீவகங்களின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களுடைய தேவைகள், பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதற்காக அங்கே சம்மந்தப்பட்ட திணைக்களங்கள், அமைப்புகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், படைத்துறையினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கடற்றொழில் செய்வதற்கு கடற்படையினரின் பாஸ் அனுமதியைப் பெற வேண்டியுள்ளது எனவும் இதற்காகத் தனியான அடையாள அட்டையை விசேடமாகப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது எனவும் இதனால் கடற்றொழிலை மேற்கொள்ளச் சிரமமாக உள்ளது எனவும் கடற்றொழில் அமைப்புக்களால் எடுத்துரைக்கப்பட்டது.
ஆகவே, இது தொடர்பாக அங்கே பிரசன்னமாகியிருந்த வடபிராந்தியக் கடற்படை கட்டளை அதிகாரி கப்டன் லுஆபுடீ.ஜெயதிலக என்பவரிடம் விளக்கத்தைக் கோரினேன். அதற்கு அவர், 'குற்றச்செயல்கள், கடத்தல்கள் போன்றவற்றைத் தடுப்பதற்காக இத்தகைய பாஸ்நடைமுறையையும் அடையாள அட்டைத் திட்டத்தையும் தாம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது' என்றார்.
'அப்படியானால், அந்தக் குற்றச் செயல்களையும் கடத்தற் சம்பவங்களையும் பதிவுசெய்துள்ளீர்களா? அப்படிச் செய்திருந்தால் அவற்றைப் பற்றிச் சொல்லுங்கள். இதேவேளை நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் சட்டவிரோதச் சம்பவங்கள் பல நடைபெறுகின்றன எனப்பல பகிரங்கச் செய்திகள் வெளிவந்துள்ளன. அங்கே ஆட்கடத்தல்கள் தொடக்கம் போதைப்பொருட் கடத்தல்வரை நடைபெறுகின்றது என பொலிஸ் திணைக்களத்தின் பதிவுகளே உள்ளன. ஆனால் இன்னும் அங்கே இப்படியான பாஸ் நடைமுறைகள் வரவில்லை. அப்படியிருக்கும்போது இங்கே மட்டும் எதற்காக இப்படி ஒரு விசேட நடைமுறை? ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அதை நாடுமுழுவதற்குமாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடற்றொழில் செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என்று பாராளுமன்றத்தில் அன்மையில் தெரிவித்து கட்டுப்பாடுகளை நீக்கியிருப்பதாகத் தெரிவித்த பதிலையும் பெற்றிருந்தேன்.' என்றேன்.
இதனை விளங்கிக் கொண்ட கடற்படை அதிகாரி, இந்திய மீனவர்களின் அத்துமீறலையும் இந்திய ஊடுருவல்களைப் பற்றியும் தெரிவித்தார். இதுதொடர்பாக நாம் அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு மாறாக விசேடமாகச் செயற்பட முடியாது. ஆகவே பாஸ் நடைமுறையும் அடையாள அட்டை முறையும் தேவையில்லை என்று தெரிவித்தேன்.
இதற்குப் பின்னர், கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதேவேளை இன்னொரு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் தெரிவித்து அனுமதியைப் பெற்றுக்கொண்டே குறித்த கடற்படை அதிகாரி அங்கிருந்து சென்றார்.
ஆனால், குறித்த செய்தியில் சீற்றமடைந்த அதிகாரி கூட்டத்திலிருந்து வெளியேறினார் என்று எழுதப்பட்டுள்ளது. இது எவ்வளவு கீழ்த்தரமான புனைவாக உள்ளது?
மேலும் குறித்த அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடுத்த விடயம் தொடர்பாக –
மண்கும்பான் பகுதியில் மணல் அகழ்வின் மூலமாக ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி பெண் ஒருவரால் எடுத்துக் கூறப்பட்டது.
இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழித்தட அனுமதி முறை மீண்டும் அமூலுக்கு வந்துள்ளதால், கனியவளத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதா எனக் கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணித்தேன்.
தொடர்ந்து சட்ட விரோத மணல் அகழ்வு நடக்காமலிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தினேன்.
இதுவே அங்கே நடந்தது. இதேவேளை குறிப்பிடப்படும் மண்கும்பான் பிரதேசத்தில் மகேஸ்வரி நிதியம் மண் அகழ்கிறது என்ற குற்றச்சாட்டை அங்கே எவருமே முன்வைக்கவில்லை. இது அங்கே பேசப்படாத ஒரு விசயத்தை இட்டுக்கட்டி எழுதப்பட்டுள்ளது. மேலும் மகேஸ்வரி நிதியம் என்ற அமைப்பு மண்கும்பானில் மணல் அகழ்வை மேற்கொள்ளவேயில்லை.
மண்கும்பானில் கனியவளத்திணைக்களத்தின் அனுமதி பெற்று எஸ்.பிரகலாதன் என்பவரே கட்டிடத்தேவைகளுக்காக மணல் அகழ்வில் ஈடுபட்டுவருகின்றார் இதுதொடர்பாக தாங்கள் தாராளமாக சகல தரப்பிடமும் விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் கனியவளத் திணைக்களத்திலும் இது தொடர்பாக தாங்கள் விவரமறியலாம்.
உண்மை நிலைமை இவ்வாறிருக்கையில் இட்டுக்கட்டப்பட்ட அவதூறைச் செய்தியாக உருவாக்கி தங்களுடைய இணைத்தளம் வெளியிட்டுள்ளது என்பதைத் தங்களுடைய கவனத்திற்கும் வாசகர்களின் கவனத்திற்கும் தெரிவிக்கிறேன்.
நன்றி
வட பிராந்திய கடற்படைத் தளபதி VS சந்திரகுமார் - மணல் அகழ்வு VS மனச்சாட்சி = சந்திரகுமாரின் மௌனம்
25 ஜூன் 2012 -
GTN NEWS
வட பிராந்திய கடற்படைத் தளபதி VS சந்திரகுமார் - மணல் அகழ்வு VS மனச்சாட்சி = சந்திரகுமாரின் மௌனம்
பாராளுமன்ற குழுக்களது தலைவரும் ஈபிடிபி முக்கியஸ்தருமான சந்திரகுமாருடன் முரண்பட்ட வடபிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி கூட்டத்தினிலிருந்து வெளி நடப்பு செய்தமை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் ஊர்காவற்றுறை பிரதேச சபை மண்டபத்தினில நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்தே வடபிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி கூட்டத்தினிருந்து வெளி நடப்பு செய்ததாக தெரியவருகின்றது.
குடாநாட்டின் பல பகுதிகளிலும் மீன்பிடி பாஸ் நடைமுறை நீக்கப்பட்டுவிட்டபோதும் தீவகப்பகுதிகளில் இவை கடற்படையினரால் அமுல்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அவ்வேளையில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த சந்திரகுமார் இதனால் சீற்றமுற்றிருந்தார்.
குறிப்பாக படையெடுத்து வந்துள்ள தெற்கு சிங்கள மீனவர்களுக்கு இத்தகைய கெடுபிடிகள் ஏதுமில்லையெனவும் உள்ளுர் மீனவர்களான தமக்கு மட்டும் இத்தகைய கெடுபிடிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தமையையடுத்தே அவர் கோபமுற்றிருந்தார்.
எனினும் அங்கு பிரசன்னமாகியிருந்த வடபிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி அரச உயர்மட்ட உத்தரவு பிரகாரமே தான் பாஸ் நடைமுறைகளை அமுல்படுத்துவதாக தெரிவித்ததுடன் இந்திய மீனவர்களது விவகாரம் மற்றும் தென்னியாவிலிருந்து நடைபெறும் ஊடுருவல் என்பவை தொடர்பாக கூறத்தொடங்கினர். எனினும் இங்கு வந்துள்ள சிங்கள மீனவர்களுக்கு இத்தகைய பாஸ் அனுமதிகளில்லையெனின் உள்ளுர் மீனவர்களுக்கும் அவை தேவையில்லையென சந்திரகுமார் கூறினார்.
இதனால் பதிலுக்கு சீற்றமடைந்த வடபிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி கூட்டத்திலிருந்து வெளியேறினார். தனக்கான கௌரவத்தை தரவில்லையென பதிலுக்கு கோபமுற்ற சந்திரகுமார் தொடர்ந்தும் கூட்டத்தை நடத்தினார்.
அதே வேளை மண்கும்பான் பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத மண் அகழ்வு காரணமாக நிலத்தடி நீர் உவர் நீராகுவதாக விவசாயிகள் தரப்பில் குற்றஞ்சாட்டுக்கள் எழுப்பப்பட்டது. உடனடியாக பொலிஸாரை அழைத்த அவர் மணல் அகழவை இடை நிறுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். எனினும் அப்பகுதியினில் மணல் அகழ்வை தங்களது மகேஸ்வரி நிதியமெனும் அமைப்பே மேற்கொண்டுவருவதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டதையடுத்து அவ்விடயத்தை பற்றி பின்னர் அவர் மேலும எதுவுமே தெரிவித்திருக்கவில்லை.