வவுனியா சிறைச்சாலையில் இருந்து மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, ராகம வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்த போது, உயிரிழந்த நிமலரூபனின் மரணத்திற்கு அரசாங்கமே முழுமையாக பொறுப்புக் கூறவேண்டும் எனவும் சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் சிவில் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த துரதிஷ்டவசமான மரணம், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையானது எந்தளவுக்கு பாரதூரமானது என்பதை உணர்த்தியுள்ளது. அதனால் இந்த மரணம் தொடர்பில் சர்வதேசத்தின் கவனமும் திரும்பும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மரணத்திலேனும் சரியான பாடத்தை கற்றுக்கொண்டு, சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறில்லை எனில், கைதிகளின் விருப்பத்திற்கு அமைய அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் நடத்திய போராட்டத்தை அடக்க, அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு, கைதிகள் கடுமை தாக்கப்பட்டனர். கைதிகள் மூன்று அதிகாரிகளை பிணையாக பிடித்து வைத்துள்ளனர் எனக் கூறியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறைச்சாலைக்குள் பொல்லுகளுடன் நுளைந்த அதிரடிப்படையினர் கைதிகளை கடுமையாக தாக்கியுள்ளனர்.
எனினும் வவுனியா சிறைச்சாலையின் உண்மையான நிலைமைகளை மூடி மறைத்து, கைதிகள் மீது குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் சுமத்தி வருவதுடன் விசாரணைகளை வேறு கோணத்தில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்தள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.