குளோபல்தமிழ்ச்செய்தியாளர் :
யாழ்..குடாநாட்டில் அரச நியமனம் பெற்ற பட்டதாரிகள் முன்னெடுக்க வேண்டிய வெலைகள் தொடர்பாக எந்தவொரு அறிவுறுத்தல்களும் மாவட்ட செயலகங்களிலிருந்து பிரதேச செயலகங்களை சென்றடையாமையால் சும்மா இருக்கப்பணிக்கப்பட்டுள்ளனர்.யாழ்.குடாநாட்டில் மட்டும் வேலையற்றிருந்த இரண்டாயிரத்து 38 பேருக்கு தற்போது வேலை வாயப்பினை வழங்கும் வகையில் நியமனங்கள் வழங்கப்பட்டள்ளது.நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் அனைவருக்கும் பயிற்சிகளை வழங்கப்போவதாக கூறி அவ்வப்பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கான இட ஏற்பாடுகளோ பயிற்சி தொடர்பான அறிவுறுத்தல்களோ அரசால் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனால் சும்மா இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட பட்டதாரிகள் வெட்டியாகப்பொழுதை கழிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.பட்டதாரிகளுக்கு எத்தகைய பயிற்சிகளை வழங்குவது தொடர்பாக எந்தவொரு அறிவுறுத்தல்களும் தமக்கு இதுவரை கிட்டியிருக்கவில்லையென செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாகாண சபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்கள் அவசர அவசரமாக இடம்பெற்றவருகின்றது.முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டமையாகவே இம்முறை வேலையற்ற பட்டதாரிகளது நியமனம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைப்பாளர்களால் வழங்கப்பட்டிருந்தது.