சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது'சிறீ சிறீ ரவிசங்கர்
'பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. ஒருவேளை நான் அந்த சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது' என்று வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் கூறினார்.
வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் பேசுகையில், 'தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாத்து தான் பெரிய பிரச்சனை. இலங்கை பேரழிவுக்கு முன்னர் நான் ராஜபக்ஷேவை சந்தித்தேன்.
சமாதான முயற்சிக்கு அவரிடம் கோரிக்கை வைத்தேன். தொடர்ந்து இலங்கை அரசு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்காத நிலையிலும் பிரபாகரனை சந்திக்க முயற்சி செய்தேன்.
ஹெலிகாப்டர் மூலம் கிளிநொச்சி வரை சென்று இரண்டு நாட்கள் காத்திருந்தேன். ஆனால் பிரபாகரனை சந்திக்க இயலவில்லை. அவரை சந்தித்திருந்தால் சமாதான முயற்சி வெற்றி பெற்றிருக்க்க்கூடும், பேரழிவும் தடுக்கப்பட்டிருக்கும்.
விடுதலை என்பது மிகவும் முக்கியமானது. அதை பெறுவதற்கு யுத்தி, சக்தி, அமைதி வேண்டும். முரட்டு பிடிவாதத்தினால் போரை வெல்ல முடியாது. தந்திர யுத்திகளால் தான் வெல்ல முடியும்.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது தமிழ் வரலாற்றில் பெரிய கறுப்பு தினம். மனிதத் தன்மை அற்ற விஷயம். இந்திய அரசு நினைத்திருந்தால் பேரழிவை தடுத்திருக்க முடியும்.
அரசியல்வாதிகள் தங்கள் சுய நலத்திலேயே கண்ணும் கருத்து கொண்டுள்ளார்கள். மக்கள் பற்றிய சிந்தனை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
போருக்கு பிறகு அகதிகளாக இருந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொன்னேன். தமிழர்கள் அந்த நிலையிலும் பண்பாட்டுடன் நடந்துகொண்டது வியக்க வைத்தது.
இனி வரும் காலங்களிலாவது, தமிழர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்,' என்றார்.