வவுனியா சிறைச்சாலையில் பாதுகாப்பு தரப்பினரின் கடும் தாக்குதல் காரணமாக காயமடைந்து, மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்த நிமலரூபனின் இறுதிக்கிரியைகள் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவு வரும் 23 ஆம் திகதி கிடைக்கும் வரையில், அதனை இடைநிறுத்தி வைக்குமாறு மகர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிரடிப்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட வவுனியாவை சேர்ந்த நிமலரூபனின் பெற்றோர், தமது மகனின் இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள உடல் தம்மிடம் வழங்குமாறு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட நிமலரூபன், போர் முடிவடைந்த பின்னர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவரது உடலை வவுனியாவுக்கு கொண்டு செல்வதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என பெற்றோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிமலரூபனின் சடலம் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டால், அங்கு அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் பிரச்சினைகள் ஏற்படலாம் என காவற்துறையினர் தெரிவித்திருந்ததை அடுத்து, மகர நீதவான், சடலத்தை மகரவில் அடக்கம் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.