கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான ஆசன ஒதுக்கீட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த முடிவுவை எட்டியதாக கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 நாட்கள் திருகோணமலையில் அனைத்து கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் ஒன்று கூடி பலத்த வாதப் பிரதி வாதங்களிடையே இந்த முடிவை எட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் 7 பிரதிநிதிகளையும் ஏனைய 4 கட்சிகளின் சார்பில் 7 பிரதிநிதிகளையும் களத்தில் இறக்கவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. திருகோணமலையில் 4 ஆசனங்கள் நான்கு கட்சிகளுக்கும் எஞ்சிய ஆசனங்கள் தமிழரசுக் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறையில் எல்லாக் கட்சிகளும் இணைந்து சிறந்த பிரதிநிதிகளை தெரிவு செய்வதாகவும் திருமலைக் கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை சவாலாக எடுத்து கூட்டமைப்பை தோற்கடித்து மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வைப்பதற்கு அரசாங்கம் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த சுமூகமான இணக்கம் அரசாங்கம் மற்றும் அதற்கு சார்பான தரப்பினருக்கு சற்று அச்சம் ஊட்டுவதாகவே அமையும் எனக் கிழக்கின் முக்கியஸ்தர்கள் சிலர் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்துள்ளனர்.