Home இலங்கை ஆட்சியைக் கவிழ்க்க மைத்திரி – மகிந்த 4 மாதங்களுக்கு முன்பே இரகசியத் திட்டம் – இந்தியாவின் போரையே என் தந்தை நடத்தினார் :

ஆட்சியைக் கவிழ்க்க மைத்திரி – மகிந்த 4 மாதங்களுக்கு முன்பே இரகசியத் திட்டம் – இந்தியாவின் போரையே என் தந்தை நடத்தினார் :

by admin

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக நான்கு, ஐந்து மாதங்களாகவே மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்ஸவும் திட்டமிட்டு வந்தனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸதெரிவித்துள்ளார். இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதியின் விருப்பம் மற்றும் அழைப்பின் பேரிலேயே, தனது தந்தை இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில், பொருளாதார அரசியல் சமூக உறுதிப்பாட்டை கொண்டு வருவதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, கடந்த பல மாதங்களாகவே, அவர்கள் இருவரும் ஆராய்ந்து வந்ததாகவும் தாம் அறிந்தவரை இந்தப் பேச்சுகள் கடந்த நான்கு, ஐந்து மாதங்களாகவே இடம்பெற்று வந்ததாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.

பழைய சகாக்கள் என்ற அடிப்படையில், 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அவர்கள் தொடர்பில் இருந்ததாக கூறிய நாமல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்வதற்கான சதி குறித்து குறித்து ரணில் விக்கிமசிங்க எதையும் கூறவில்லை எனவும் இதனுடன் தொடர்புடைய பிரதிக் காவல்துறைமா அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் சதித்திட்டம் பற்றிய குற்றச்சாட்டு பாரதூரமானது. ஆனால், இதற்காக மாத்திரம் மைத்திரி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு வேறு பல காரணங்களும் இருந்தன எனவும் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து பணியாற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் ஆரம்பத்திலிருந்து வெற்றியளிக்கவில்லை எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.

2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட முதல் நாளில் இருந்தே, இந்தக் கூட்டணி வெற்றிபெறாது என்பது தங்கள் தரப்பிற்கு தெரியும் எனவும் இருவரும் வௌ;வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள், அவர்கள் இருவரும் வௌ;வேறு அரசியல் கொள்கைகளைக் கொண்டவர்கள், அவர்களின் பொருளாதார சமூக அரசியல் கொள்கைகளிற்கு இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. ஆகவே, இந்த விடயங்கள் ஒருபோதும் இணையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் தனது தந்தையைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்பாக அவர்கள் இதனைக் கருதியதாகவும் இந்தக் கூட்டணியின் முழு நோக்கமும் தேர்தலாக இருந்ததே தவிர, இவர்களிடம் நாட்டை ஆட்சி செய்வதற்கான திட்டமிருக்கவில்லை எனவும் தற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்களால் இந்தியா கவலையடைய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் கூறினார்.

தனது தந்தையோ அல்லது அவரது அரசோ எடுத்த எந்த முடிவின் பின்னாலும், சீன அரசோ அல்லது வெளிநாடொன்றின் செல்வாக்கோ இருக்கவில்லை எனவும் கடந்த காலங்களில் இந்தியா – இலங்கை இடையே புரிந்துணர்வின்மை காணப்பட்டதாகவும் கூறினார்.

இந்தியா கவலையடைய வேண்டியதில்லை. இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியா பங்காளியாக விளங்கும் என்றும் போரின் போது இந்தியா எனது தந்தைக்குத் நெருக்கமாக இருந்தது. இந்தியா பயங்கரவாதத்தை தோற்கடிக்க உதவியது. நாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம் எனவும் நாமல் குறிப்பிட்டார்.

ராஜீவ் காந்தியை பிரபாகரன் படுகொலை செய்தமை அனைவருக்கும் அது தெரியும் எனவும் தாம் தமக்கான போரை மாத்திரம் நடத்தவில்லை எனவும் கூறிய நாமல் ராஜபக்ஸ, இந்தப் பிராந்தியத்துக்கான அமைதியைக் கொண்டு வந்திருப்பதாகவும் தனது தந்தை பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வந்தார் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More