Home இலங்கை ஊடகங்கள் எங்களிடம் மன்னிப்புக் கோருங்கள்

ஊடகங்கள் எங்களிடம் மன்னிப்புக் கோருங்கள்

by admin

ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பியமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் மன்னிப்பு கோருங்கள் என கோரிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க. சுகாஸ், தவறான செய்திகளை பிரசுரித்த ஊடகங்களுக்கு தவறை திருத்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம். எங்களை ஊடகங்கள் மிதிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என ஊடக சந்திப்புக்கு சென்று இருந்த ஊடகவியலாளர்களை எச்சரிக்கும் தொனியில் கருத்து தெரிவித்தார். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்து அவ்வாறு தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

பல்வேறு வகையான செய்திகள் திட்டமிட்ட முறையில் அரச சார்பு ஊடகங்களாலும் தமிழ் தேசியத்தை சிதைக்க வேண்டும் என செயற்படும் ஊடகங்களாலும் பரப்பப்பட்டுக் கொண்டு  இருக்கின்றது. 

தமிழ் தேசியத்திற்கு எதிரான சதிக்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் துணை போகின்றார்கள். தெரிந்து போகிறார்களா?  இல்லை தெரியாமல் போகிறார்களா ? என தெரியவில்லை. 

 எஜமானின் கட்டளைக்காக ஊடகவியலாளர்கள் தமிழ் தேசியத்தின் கட்டமைப்பை உடைக்கின்றார்கள். தமிழ் தேசியத்தை தெரிந்தோ தெரியாமலோ அழிக்க முற்படுகிறார்கள். தவறான செய்திகளை பிரசுரித்த ஊடகங்களுக்கு தவறை திருத்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம். 

உண்மையை சொல்லும் ஊடகங்கள் எனில் நாளை இந்த செய்தியை முன் பக்கத்தில் பிரசுரியுங்கள். முடிந்தால் தவறான செய்திகளை பரப்பியமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் கோருங்கள். 

எனது கருத்துக்கள் ஒரு சிலருக்கு உறுத்தல்களை ஏற்படுத்தி இருக்கலாம். உறுத்தல்களை ஏற்படுத்திக்கொண்டால் மன வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உறுத்தல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் நான் அவ்வாறு கருத்து தெரிவித்தேன். 

தெரியாமல் தவறு செய்தால் அந்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும். எங்களை ஊடகங்கள் மிதிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்றார்.

அத்துடன் நினைவேந்தல் நிகழ்வுகளை நாம் தொடர்ந்தும் அரசியல் பேசுவோம் என அழுத்தமாக தெரிவித்துள்ளார். 

தியாக தீபத்தின் நினைவிடத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தியாக தீபத்தின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குழப்பங்களை ஏற்படுத்தி , முரண்பாடுகளை வளர்த்தார்கள் என ஊடகங்களில் செய்திகள் வெளி வந்த நிலையிலையே இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தனது கட்சி அலுவலகத்திற்கு ஊடகவியலாளர்களை அழைத்து குறித்த ஊடக சந்திப்பினை நாடாத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More